தீபாவளிக்கு வழக்கம் போலவே கஷ்டப்படப்போகும் தென்மாவட்ட மக்கள்!

தாம்பரம்.முரளி,
தீபாவளிக்கு வழக்கம் போலவே தென்மாவட்ட மக்கள் கஷ்டப்படப்போகிறார்கள் என்றே தெரிகிறது.
இது பற்றின விவரம் வருமாறு,
கோயேம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்டுள்ள நெரிசலை குறைக்க,வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டுமானப் பணிகளை முடிப்பதில், தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி தீபாவளி பண்டிகையின் போது இப்பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வருமா என்று தெரியவில்லை.
ஏற்கனவே சென்னை கோயம்பேடில், 2002- ல் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட்ட்டு வருகின்றன.
அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுவதால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, சென்னையில் மூன்று புதிய பேருந்து நிலையங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம், திருமழிசை அடுத்த குத்தம்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு, மாதவரம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம் பேருந்து நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
அப்படியிருக்க கிளாம்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில், 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் கடந்த 2019ல் துவங்கின.
இப்பணிகள் வரும் செப்டம்பர் இறுதிக்குள் முடிக்கப்பட்டு, தீபாவளி பண்டிகையின் போது இங்கிருந்து வெளியூர் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்தது.
சி.எம்.டி.ஏ., மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகளும், இதற்கான ஆயத்தப் பணிகளை துவக்கினர்.ஆனால், கட்டுமானப் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி தீபாவளி பண்டிகையின் போது இப்பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வருமா என்று சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து அதிகாரிகள் சிலர் கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் நடக்கவில்லை. அடிப்படை கட்டுமானப் பணிகள் முடிந்தாலும், அது சார்ந்த பிற கட்டுமானப் பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி செப்டம்பர் இறுதிக்குள் பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டதில், இது தெரிந்தது. நடைமேடைகள், பேருந்து நிலைய முனையத்தின் தரைதளப் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. ஆனால், பேருந்து பணிமனை, வாகனம் நிறுத்துமிடம், வழித்தட பாதை ஆகியவை தொடர்பான பணிகள் முழுமை அடைய வில்லை.
தற்போதைய நிலவரப்படி, 2023 பிப்ரவரியில் தான், பேருந்து நிலையம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது. இருப்பினும், பணிகளை விரைவாக முடித்து, பொங்கல் பண்டிகையின் போது பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள்.