ஜெயலலிதாவுக்கு தமிழகமெங்கும் நினைவஞ்சலி!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆவது நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்பட அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
அதே போல் தமிழகமெங்கும் மக்கள் ஜெயலலிதாவின் போட்டோவை வைத்து மாலையிட்டு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் தொடர்ந்து, 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி தனது 68 வயதில் உயிரிழந்தார். இந்நிலையில் இன்றைய தினம் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து மரியாதை செலுத்தினர். உடன் அதிமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள புகழஞ்சலி செய்தியில்,
காலமெல்லாம் நிலைத்திருக்கும் நீங்கா புகழாகவும், கருணை நிறைந்த மெய் அன்பாகவும், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆளுமையாகவும், மக்களின் நெஞ்சங்களில் குடியிருந்து எங்களை வழிநடத்தும் தெய்வத்தாயே உங்கள் நினைவை போற்றி வணங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.