போலிசார் கதி இதுதானா? விமர்சனங்களுக்கு செவி சாய்த்த அரசு:-  உளவுத்துறைக்கு புதிய ஐஜியை நியமித்தது!!

போலிசார் கதி இதுதானா? விமர்சனங்களுக்கு செவி சாய்த்த அரசு:-  உளவுத்துறைக்கு புதிய ஐஜியை நியமித்தது!!

ம.பா.கெஜராஜ்,

 கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தின் எதிரொலியாக தமிழக உளவுத்துறை விமர்சன பொருளாக ஆனது. அப்பிரிவினரை பலதரப்பினர் பிண்ணி பெடலெடுத்தனர். ஆனால் உண்மை நிலவரமோ வேறு கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்துக்கு முன்கூட்டியே உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. அவர்கள் வழக்கம் போலவே ஊதாசீனப்படுத்தியதன் எதிரொலிதான் இன்றைக்கு இவ்வளவு பெரிய கலவரத்தை அந்த மாவட்டம் சந்திக்க வேண்டியதாயிற்று.

 அதாவது மாணவியின் மரணத்தை மையப்படுத்தி கலவரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு பத்துக்கும் மேற்பட்ட முறை உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஜூலை 17ஆம் தேதி கள்ளக்குறிச்சி கலவரம் நடைபெறுவதற்கு முன்பாகவே மாவட்ட நிர்வாகத்தை மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது. மாணவ அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் சேர்ந்து பள்ளியை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது என ஜூலை 15ஆம் தேதியே உளவுத்துறை எச்சரித்துள்ளது.

 மேலும் இந்த கலவரத்திற்கு 2 நாட்களுக்கு முன்பே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால் மாவட்ட காவல்துறை இந்த எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இதனை வழக்கமான ஒன்றாக எடுத்துக் கொண்டு அலட்சியமாக இருந்ததாக தெரிய வந்துள்ளது.

 இந்த விவகாரத்தில் உளவுத்துறை கொடுத்த அறிக்கையை, எஸ்.பி.இன்ஸ்பெக்டர் மாவட்ட எஸ்.பி.யிடம் உரிய முறையில் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

  ஆனால் உளவுத் துறையின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத மாவட்ட்ட நிர்வாகம் குறைந்த எண்ணிக்கையிலான போலிசாரை அந்த குறிப்பிட்ட பள்ளிக்கூடத்தில் வாயிலில் நிற்கவைத்தனர்.

 வன்முறையாளர்கள் அங்கு கூடாதபடிக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. அதை தகர்த்தெரிந்து நுழைந்த வன்முறையாளர்கள் அவ்வளவு எளிதாக உள்ளே நுழைய இயலவில்லை. அங்கிருந்த ஆண் பெண் போலிசார் அவர்களால் இயன்ற அளவுக்கு தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

 ஆனால் அப்படி தங்கள் கடமையை ஆற்றிய போலிசார் பலருக்கு மண்டை உடைப்பு ஏற்பட்டதே மிச்சம். பெண் போலிசார் என்று பாராமல் அவர்கள் விரட்டப்பட்டனர்.  அந்த காட்சிகளை பார்க்கிற போது பாவம் போலிசார் என்றே உச் கொட்டக்கூடும்.

 இந்த காட்சிகளைப் பார்கிற போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி ஆம்பூரில் கள்ளக் காதல் சாவு தொடர்பாக கலவரம் ஏற்பட்டது.

 அப்போது வேலூர் மாவட்ட எஸ்.பி.யாக செந்தில்குமாரி என்பவர் இருந்தார்.  அவரது மண்டையை வன்முறையாளர்கள் பதம் பார்த்தனர். 

 அந்த கலவரத்தில் முன்கள தடுப்பாளர்களான பிறமாவட்ட ஆயுதப்படை வீரகள் வெட்டுண்டனர். பெண் போலிசார் பயணித்த வேன்கள் குலுக்கி சாய்க்கப்பட்டன. போலிஸ் ஜீப்கள் எரிக்கப்பட்டது. அதையும் கடந்து பொதுமக்களையும் பொது சொத்துக்களையும் குறிப்பாக காவல் நிலையங்களை ஆயுதப்படை வீரர்கள் காப்பாற்றினர்.

 இந்த கலவரம் நடந்த போது நந்தகோபால் என்பவர் வேலூர் கலெக்டராக இருந்தார். அவர் பதுங்கி பதுங்கி ஸ்பாட்டுக்கு வந்தார். அதிகாரிகளுக்கு அவர் எந்த உத்தரவையும் வழங்கவில்லை. அப்போது ஜெ.ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக இருந்தார்.

  இந்த கலவரத்தை செய்ததாக 107 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் 150 க்கும் மேற்பட்ட போலிசார் பலத்த காயம்பட்டனர்.

 காயம்பட்ட போலிசாருக்கு என்ன பரிகாரம் அளிக்கப்பட்டது, இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமான மேற்படி எஸ்.பி மற்றும் கலெக்டர் ஆகியோர் மீது ஏதாவது விசாரணை நடத்தப்பட்டது என பல கேள்விகள் உண்டு.

 சரி இருக்கட்டும் அவர்களை அப்போதைக்கு இடமாற்றம் செய்தார்களா? என்றால் அதுவும் செய்யவில்லை. 

 ஆனால் தற்போது தமிழக அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு ஆம்பூர் கலவரத்தை லேசாக கையாண்டதைப்போல் அல்லாமல், விமர்சனங்களின் தன்மைக்கேற்ப நடவடிக்கை எடுத்துள்ளது.

   அந்த வகையில் 12 காவல் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக உளவுத்துறை ஐஜியாக செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

   சென்னை பூக்கடை துணை கமிஷனர் மகேஷ்வரன் மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாகவும், சென்னை வடக்கு போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் ஆல்பர்ட் ஜான், பூக்கடை துணை கமிஷனராகவும், ஆவடி டிஎஸ்பி-வி பட்டாலியன் எஸ்பி ராதாகிருஷ்ணன் சீருடைப் பணியாளர் தேர்வாணைய எஸ்.பி.யாகவும், சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் திருவல்லிக்கேணி துணை கமிஷனராகவும், எஸ்.பி. கண்ணன் சென்னை நவீனமயமாக்கல் பிரிவு உதவி ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 எது எப்படியோ, விமர்சனம் என்று வந்துவிட்டால் அதற்கு செவிசாய்க்க வேண்டும் என்று கருதுகிற அரசின் செயல்பாடு பாராட்டத்தக்கதுதானே?