செங்கோட்டையனை கட்சியிலிருந்து ஓரம் கட்ட பிளானா?

ம.பா.கெஜராஜ்,
கட்சியின் அதிவிசுவாசி என்று பெயர் பெற்ற முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து ஓரம் கட்ட பிளான் செய்யப்படுவதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.
அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருகின்றார். அந்த வகையில் நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
மாநில கொள்கைபரப்பு துணை செயலாளர் காளிதாஸ் பேசும் போது, முன்னாள் அமைச்சர்கள், ஆட்சியில் இருந்தபோது நன்றாக சம்பாதித்தார்கள். ஆட்சி போனவுடன் செலவு செய்வதை நிறுத்தி விட்டார்கள்.
தேர்தலில் அவர்கள் செலவு செய்திருந்தால் பல தொகுதிகளில் வென்றிருக்கலாம். கோபிச்செட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக 25 ஆயிரம் ஓட்டு குறைவாக வாங்கியுள்ளோம். இதற்கு காரணம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செலவு செய்யவில்லை. வேலையே செய்யவில்லை.
சம்பாதிக்கும்போது இருந்த வேகம், ஆட்சியில் இல்லாதபோது இருப்பதில்லை. தேர்தல் தோல்விக்கு முன்னாள் அமைச்சர்கள் செலவு செய்யாததே காரணம் என்று குற்றம்சாட்டினார்.
கோபி காளிதாஸ் பேசும்போது எடப்பாடி பழனிசாமி அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
உடனே செங்கோட்டையன் எழுந்து, காளிதாஸ் இதுபோன்று பேசக்கூடாது. இது ஒன்றும் தெருமுனைக் கூட்டம் இல்லை. பேசி கைதட்டல் வாங்குவதற்கு. கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம். நான் வேலை செய்யவில்லை என்று எப்படிக் கூறலாம். உண்மையை பேச வேண்டும். அடிமட்டத்தில் இருந்து வேலை செய்துதான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். அதனால் நாங்கள் வேலை செய்யவில்லை என்று எப்படிக் கூறலாம்.
பல தடைகளை தாண்டித்தான் நாங்கள் வேலை செய்கிறோம். போகிற போக்கில் எல்லாம் பேசக்கூடாது. நீங்கள் பேசுவது மிகப்பெரிய தவறு என்று செங்கோட்டையன் ஆவேசமாக மறுத்து பேசினார்.
பின்னர் கூட்டம் முடிவதற்கு முன்னதாக யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வேகமாக புறப்பட்டுச் சென்று விட்டார். அதன்பின்னர், தனது வீட்டில் நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனையும் நடத்தினார். முன்னதாக செங்கோட்டையின் கூட்டத்தில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு எழுந்தது.
கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் இரு தரப்பினர் மோதும் வகையில் பேசினால், எடப்பாடி அவர்களை அமைதிப்படுத்துவார். ஆனால் காளிதாசின் பேச்சைக்கேட்டு அவர் அமைதியாக இருந்து விட்டார்.
அதற்கு காரணம், திருப்பூர் மக்களவையில் அதிமுக வேட்பாளராக அருணாச்சலம் என்பவர் போட்டியிட்டார். இவர், கொங்கு பேரவையில் இருந்தவர். அவரை முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், அமைச்சராக இருந்தபோதுதான் கட்சியில் சேர்த்தார். அவர் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலராக உள்ளார்.
அப்படியிருக்க அருணாச்சலம் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனரான¢ ராமலிங்கத்தின் பங்காளி என்பதால், அவரது பரிந்துரையின் பேரில் சீட்டு கொடுக்கப்பட்டது.
இது குறித்து மாவட்டச் செயலாளரான செங்கோட்டையனிடம் ஆலோசனை நடத்தாமல், வேட்பாளராக அருணாச்சலம் அறிவிக்கப்பட்டார். இதனால் கோபமடைந்த செங்கோட்டையன், உடல்நலக்குறைவு என்று கூறி, மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார். வேட்பாளர் 3 நாட்களுக்குப் பிறகுதான் செங்கோட்டையனை சந்திக்க முடிந்தது.
அப்போதே செங்கோட்டையன் சரியாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இது போன்ற காரணங்களால் தான் தற்போது செங்கோட்டையனை ஓரம்கட்ட முயற்சிகள் நடப்பதாக ர.ரக்கள் கொதிக்கிறார்கள்.
தமிழகத்தில் ஒத்தை எம்பி சீட்டைக்கூட பெறாதபோது அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அல்லவா பொறுப்பேற்க வேண்டும் என்றும் புலம்புகிறார்கள்.