இந்தியா கூட்டணியில் முக்கிய முடிவு!  மும்பைக்கு பறக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்!

இந்தியா கூட்டணியில் முக்கிய முடிவு!   மும்பைக்கு பறக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்!

ம.பா.கெஜராஜ்,

  எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மும்பைக்கு விரைகிறார்.

 நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு அரசியல் கட்சியும் இப்போதே தங்களை தயார்படுத்தி வருகின்றன. பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பாக பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடி நிறுத்தப்படுகிறார். ஆனால் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்று இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.

   இந்த சூழலில் மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க.-வுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்பட 16 கட்சிகள் இணைந்து ஐ.என்.டி.ஐ.ஏ. (இந்தியா) என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்தது. இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடந்தது. பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ஐ.என்.டி.ஐ.ஏ. என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில், இந்த கூட்டணியின் மூன்றாவது கூட்டம்  மும்பையில் நடைபெற இருக்கிறது.

   இந்த கூட்டம் நிறைவுபெற்றதும், முக்கிய முடிவுகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே கூட்டத்தில் எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  அப்படியிருக்க ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மும்பை புறப்பட்டுச் செல்கிறார். இந்த கூட்டம் முடிந்ததும் செப்டம்பர் 1-ம் தேதி இரவு அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.