கொஞ்சம் விட்டிருந்தால் "காக்கை உட்கார பனைபழம்" விழுந்த கதையாகியிருக்கும்! சட்டமன்ற தீர்மானத்தை சுட்டிக்காட்டி பேசிய முதல்வர்!!

 கொஞ்சம் விட்டிருந்தால் "காக்கை உட்கார பனைபழம்" விழுந்த கதையாகியிருக்கும்! சட்டமன்ற தீர்மானத்தை சுட்டிக்காட்டி பேசிய முதல்வர்!!

 ம.பா.கெஜராஜ்,

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமையை இரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி உறுதியான நடவடிக்கை எடுத்தமைக்காக மதுரை மாவட்டம் வள்ளாலபட்டி கிராம மக்கள் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், அக்கிராம மக்களின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

 திட்ட அறிவிப்பும்... ரத்து அறிவிப்பும்,

  மதுரை மாவட்டம். அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையவுள்ளதாகவும், அதற்கான ஏல உரிமையை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு அறிவித்தது. இதற்கு தமிழ்நாடு அரசும், அப்பகுதி கிராம மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

   இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டி பாதிக்கப்படும் என்று கூறி மதுரை மாவட்டத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 9.12.2024 அன்று மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக இரத்து செய்திடவும். மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்தச் சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

   இத்தனித் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, தமிழ்நாடு முதலமைச்சர், "எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டிற்குள் ஒன்றிய அரசால் போடப்படக்கூடிய இந்தத் திட்டம், நிச்சயம் வரக்கூடிய வாய்ப்பு இருக்காது, அதைத் தடுத்து நிறுத்துவோம்.

  அப்படி ஒரு சூழல் வந்தால் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன்" என்று தெரிவித்தார். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மக்களின் உணர்வுக்கும். மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்து, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை இரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது.

  டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமையை இரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுஇத்திட்டம் இரத்து செய்யப்பட காரணமாக இருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை ஜன- 25 மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம் பட்டி, நாயக்கர்பட்டி, செட்டியார்பட்டி, தெற்கு தெரு, மீனாட்சிபுரம், மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் சந்தித்து, தங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.

 தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் (26.1.2025) குடியரசு நாள் விழா முடிவுற்ற பின்னர் சென்னையிருந்து மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார். மதுரையிலிருந்து அரிட்டாபட்டிக்கு சாலை மார்க்கமாக சென்ற தமிழ்நாடு முதலமைச்சருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அக்கிராம மக்களிடம் முதல்வர் ஆற்றிய உரை:

   நான் திடீரென்று வந்ததற்கு காரணம் உங்கள் எல்லோருக்கும் தெரியும். நேற்றைக்கு மாண்புமிகு அமைச்சர் திரு. மூர்த்தி அவர்களின் தலைமையில், அரிட்டாப்பட்டி பகுதியை சுற்றியிருக்கக்கூடிய மக்கள், அந்தப் பகுதியில் உள்ள பெரியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நேற்றைக்கு வந்து என்னை கோட்டையில் சந்தித்தனர்.

  டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் முழுமையாக இரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டதற்கு எப்படிப்பட்ட அழுத்தத்தை இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மக்கள் தந்தார்கள் என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும்.

   அதை உணர்ந்து உங்களால் உருவாக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சி, அதாவது உங்களுடைய நம்பிக்கை பெற்றிருக்கக்கூடிய உங்களில் ஒருவனாக இருக்கக்கூடிய இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சியில், நாடாளுமன்றத்தில் நம்முடைய கூட்டணியில் உள்ள எம்.பிக்கள் எல்லோரும் பேசி, அதற்குப் பிறகு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அது இன்றைக்கு நாம் நினைத்ததுபோல வெற்றியடைந்திருக்கிறது.

   அந்த தீர்மானத்தை நிறைவேற்றுகின்ற நேரத்தில், அது அதிமுக கட்சியாக இருந்தாலும் சரி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய முஸ்லீம் லீக் போன்ற எல்லா கட்சிகளும் சட்டமன்றத்தில் ஒன்று சேர்ந்து அந்த தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றிக் கொடுத்தார்கள்.

   அப்படி நிறைவேற்றிக் கொடுத்த நேரத்தில் நான் தெளிவாக சொன்னேன். மக்களால் இன்றைக்கு ஆட்சியில் இருக்கக்கூடிய நான் இந்த முதலமைச்சர் பொறுப்பில் இருக்கின்றவரைக்கும் நிச்சயமாக டங்ஸ்டன் திட்டம் வராது. அதைப்பற்றி மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை அழுத்தந்திருத்தமாக நான் எடுத்துச் சொன்னேன்.

  என்பதை அதுமட்டுமல்ல, அப்படி ஒருவேளை வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால், நான் பதவியில் இருக்கமாட்டேன் என்று அதையும் சொன்னேன்.

  ஆனால், அதற்காக நேற்றைக்கு என்னை சந்தித்த இந்தப் பகுதியில் உள்ள பெரியவர்கள் எல்லாம் பாராட்டு நிகழ்ச்சி நடத்தவேண்டும். உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் என்று அழைத்தார்கள். உள்ளபடி எனக்கு பாராட்டு சொல்வதைவிட, நன்றி சொல்வதைவிட உங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்; உங்களுக்குத்தான் பாராட்டு சொல்லவேண்டும். நான், உங்கள் என்று பிரித்து பேச விரும்பவில்லை.

  நாம், நமக்கு இதில் வெற்றி கிடைத்திருக்கிறது. அதுதான் உண்மை. ஆகவே, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கக்கூடிய நாங்கள் என்றைக்கும் உங்களுக்குத் துணை நிற்போம் என்பதை மீண்டும் ஒருமுறை இங்கே உறுதி சொல்கிறேன்.

 இவ்வாறு முதல்வர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து, வள்ளாலபட்டி கிராமத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு அக்கிராம முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான திட்டத்தை இரத்து செய்ய உறுதியான நடவடிக்கை எடுத்தமைக்காக கிராம மக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டனர்.

    அரிட்டாபட்டி மற்றும் வள்ளாலபட்டி கிராம மக்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் உரையாற்றியபோது: மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு திட்டத்தையும் ஒன்றிய அரசு செயல்படுத்த நினைத்தால் அதனை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தி, மக்களின் நலனைக் காக்கும் என்று சொன்னார்.

     இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ்.சங்கீதா ஆகியோர் பங்கேற்றனர்.

முதல்வர் அங்கு சென்றிருக்கவில்லையெனில் "காக்கை உட்கார பனைபழம் விழுந்த" கதையாக இன்னும் ஜோராக பாஜக தம்பட்டம் அடித்திருக்கும்.