140 கோடி இந்தியர்களின் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்தேன்!

140 கோடி இந்தியர்களின் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்தேன்!

  ஜி.சாந்தகுமார், 

  140 கோடி இந்தியர்களின் ஆரோக்கியத்துக்காகவும், நல்வாழ்வுக்காகவும் ராமநாத சுவாமி கோயிலில் பிரார்த்தனை செய்தேன் என பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

   உ.பி. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதம் இருந்து, முக்கிய ஆன்மிகத் தலங்களில் வழிபாடு நடத்திய நிலையில், அவர் 3 நாட்கள் பயணமாக கடந்த 19-ம் தேதிதமிழகத்துக்கு வந்தார். சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

  பின்னர் நேற்று முன்தினம் காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்தார். அன்று மாலை ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து நேற்று காலை 9 மணியளவில் ராமகிருஷ்ண மடத்திலிருந்து காரில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்ற பிரதமர் தொலைநோக்கி கருவி மூலமாக ராமர் பாலம் இருந்ததாக நம்பப்படும் இடங்களைப் பார்வையிட்டார்.

 பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் மலர்களைத் தூவி வழிபாடு செய்தார். கடற்கரையோரத்தில் நாற்காலியில் அமர்ந்து மூச்சுப் பயிற்சி மற்றும் தியானத்தில் ஈடுபட்டார். பின்னர், அரிச்சல்முனையில் உள்ள அசோகச் சின்ன ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர், தனுஷ்கோடியில் ராமர், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் நடத்திய தலமான கோதண்டராமர் கோயிலில் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

  பின்னர், ராமேசுவரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடிலிருந்து பகல் 11.45 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர், 12.40 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்து பகல் 1 மணியளவில் தனி விமானம் மூலம் பிரதமர் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

 இந்நிலையில் அரிச்சல்முனையில் வழிபாடு செய்தது குறித்து எக்ஸ் சமூக வலைதளப் பிரதமர் மோடி பதிவு வெளியிட்டிருக்கிறார்.

   ஸ்ரீரங்கநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்யும் பாக்கியம் கிடைத்தது. இந்தக் கோயிலுடனான பிரபு ஸ்ரீராமரின் தொடர்பு நீண்டது ஆகும். பிரபு ஸ்ரீ ராமர் வழிபட்ட கடவுளால் நானும் ஆசிர்வதிக்கப்பட்டதைப் பாக்கியமாக உணர்கிறேன். 140 கோடி இந்தியர்களின் ஆரோக்கியத்துக்காகவும், நல்வாழ்வுக்காகவும் ராமநாத சுவாமி கோயிலில் பிரார்த்தனை செய்தேன்.

பிரபு ஸ்ரீராமின் வாழ்க்கையில் சிறப்பு வாய்ந்த அரிச்சல் முனையில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது ராமர் சேதுவின் தொடக்கப் புள்ளியாகும் என பதிவிட்டிருக்கிறார்.