திமுகவை அடுத்த நூற்றாண்டு வரை கூட வழிநடத்தும் ஆற்றல் உதயநிதிக்கு உள்ளது! அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

ம.டெல்லிராஜன்,
திமுகவை அடுத்த நூற்றாண்டு வரை கூட வழிநடத்தும் ஆற்றல் உதயநிதிக்கு தான் இருக்கிறது என்று
அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
திமுக இளைஞரணியின் மாநில மாநாடு சேலத்தில் நேற்று நடைபெற்றது. மாநில உரிமை மீட்பு மாநாடு என்ற முழக்கத்துடன், இளைஞரணி செயலாளராக உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து முதல்வரும், அமைச்சர்களும் பேசினர்.
அதே போல் இந்த மாநாட்டில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: திமுகவில் மூத்த உறுப்பினர் என்ற வகையில் இதுவரை எத்தனையோ கட்சி மாநாடுகளை பார்த்திருக்கிறேன். ஆனால், உண்மையில், தம்பி உதயநிதி நடத்திய இந்த மாநாட்டை போல ஒரு பிரம்மாண்டமான மாநாட்டை நான் பார்த்ததே இல்லை.
காரணம், 1200 அடி நீளம். 600 அடி அகலம். 100 ஏக்கரில் ஒரு மாநாட்டை நடத்தி இருக்கிறார். 100 ஏக்கரில் ஒரு மாநாட்டை நடத்தக்கூடிய கட்சி என்றால் அது திமுக மட்டும்தான். இதை விட நமக்கு வேறு என்ன பெருமை வேண்டும்?
ஆகவே, தாய் கழகத்தையே மிஞ்சக்கூடிய அளவுக்கு இளைஞர் அணி முன்னேறி இருப்பதை பார்த்து, கழகத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையிலே நான் பெருமைப்படுகிறேன்.
தலைவர் கலைஞர் அவர்கள், 50 ஆண்டுகாலம் தலைவராக இருந்து இந்த இயக்கத்தை நடத்தி சென்றிருக்கிறார். இப்போது நமது தலைவர் (ஸ்டாலின்) கழகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அதற்கு பிறகு, இந்த இயக்கத்தை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்கின்ற ஆற்றல் தம்பி உதயநிதிக்கு இருக்கிறது என்பதை அவர் நிரூபித்து காட்டி இருக்கிறார். என்று துரைமுருகன் பேசினார்.