வரலாறும் வாழ்விழந்துவிட்டதே! 12 ஆம் தேதி இறைவனிடம் மன்றாட அறிவுறுத்தும் பிஷப்!

வரலாறும் வாழ்விழந்துவிட்டதே! 12 ஆம் தேதி இறைவனிடம் மன்றாட அறிவுறுத்தும் பிஷப்!

ம.பா.கெஜராஜ்,

 மண்ணதிர்வும் மனக்கண்ணீரும்' என்கிற தலைப்பில் வேலூர் சி.எஸ்.ஐ பேராயர் எச்.சர்மா நித்தியானந்தம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை மக்கள் முன் வைத்திருக்கிறார். துருக்கி துயரத்தை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

எனக்கு அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!

  மத்திய கிழக்கு நாடான துருக்கியிலும், சிரியாவிலும் பிப்ரவரி 6-ஆம் நாள் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம், உலகத்தில் சோக அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. நிலவதிர்வால் ஆயிரக்கணக்கான மக்கள் மண்ணில் புதைந்தும், இடிபாடுகளுக்கிடையில் சிக்கியும் தம் இன்னுயிரை இழந்தனர்.

 நகரங்களும், ஊர்களும், உறவுகளும் நிலைகுலைந்து போயின, தலைநிமிர்ந்திருந்த கட்டடங்கள் தரைமட்டமாயின.

 மருத்துவமனைகள், பள்ளிகள் போன்றனவும் இமைப்பொழுதில் சரிந்தன. பெற்றவர்களை இழந்த சிறார்கள் தம் பாசக்குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றவர்கள், தம் கணவரைக் காண முடியாமல் ஓலமிட்ட மனைவியர். மனைவியரின் உயிரற்ற உடலைக் கண்டு உறைந்துபோன கணவர்மார்கள் இப்படிப்பட்ட அவலக் காட்சிகள் நம் நெஞ்சை உலுக்குகின்றன.

  செஞ்சிலுவைச் சங்கம் போன்ற பேரிடர் மீட்புக் குழுவினரும் இந்த நிலநடுக்கத்தால் மண்ணுக்குள் மறைந்துபோய் உள்ளனர்.

 இப்படி வாழ்வு மாத்திரமல்ல, 2200 ஆண்டுக் காலப் பழைமை வாய்ந்த ரோமப் பேரரசுக் காலத்துக் கோட்டையும் அங்குச் சரிந்ததால் வரலாறும் வாழ்விழந்துவிட்டது.

  துருக்கியில் "அந்தியோகியா நகர்" மிகவும் சிறப்புக்குரியதாய்த் திகழ்ந்தது.

  இந்த நகர் குறித்து, விவிலியம் 'திருத்தூதர் பணிகள்' நூல் பிரிவு 6 முதல் 13 வரை நன்கு குறிப்பிடுகிறது. பான்பாவும் பவுலும் அருளுரை ஆற்றியதும். யூதேயா மிகவும் கொடிய பஞ்சத்தில் வாடியபோது நேசக்கரம் நீட்டியதும், சீடர்கள் முதன்முதலில் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டதும் இந்நகரில்தான் என்பன அரிய செய்திகளாகும்.

 இத்தகு சிறப்பு வாய்ந்த நகரம் அழிந்ததை ஊடகங்கள் உணர்த்தியபோது, நாம் வடித்த

மனக்கண்ணீர் அவர்களின் சோகத்தில் பங்குகொள்ளச் செய்தது.

 துருக்கி. சிரியா நாடுகள் இழந்த இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை.

 எல்லாரையும் படைத்தவர் கடவுள். அந்த வகையில் நாம் எல்லாரும் ஒரே குடும்பத்தாரே. இந்த உணாவே இப்போது மேலோங்கி உள்ளது.

 தற்போது அங்குக் காயமுற்று உயிருக்குப் போராடும் எல்லாருக்கும் இறைவனிடம் மனமுருக மன்றாடுவோம். இத்தகைய இயற்கைச் சீற்றங்கள் இனி ஏற்படாதவாறு கடவுளிடம் வேண்டுவோம்.

 எனவே எனக்கு அன்பார்ந்த பேராய ஆயர்களே, இறைமக்களே! துருக்கி, சிரியா நாடுகளுக்காக 12.2.2023 ஞாயிறு வழிபாட்டின்போது சிறப்பு இறைவேண்டலை ஏறெடுப்போம்.

 அன்று மாலை 7.00-7.30 மணிக்குப் பேராயத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவரவர் இல்லத்தில் முழங்காலிட்டு அம்மக்களின் ஆறுதலுக்காகவும், ஆற்றலுக்காகவும், மரணமடைந்தர்களின் ஆன்மாவின் அமைதிக்காகவும் அன்பராம் ஆண்டவர் ஏசுவிடம் மன்றாடுவோம்.

இம்மன்றாட்டின் வாயிலாக அம்மக்களுக்கு நமது அன்பைப் புலப்படுத்துவோம். அன்று உணவு சார்ந்த விழாக்களையும். கூடுகைகளையும் தவிர்த்து அந்நாடுகளின் துக்கத்தில் பங்குகொள்வோம். கடவுளின் சமாதானம் அந்நாடுகளுடன் இருந்து அவற்றிற்கு ஆண்டவர் நற்பேறு அளிப்பாராக.

  சோகத்தில் உங்கள் அன்புப் பேராயர், பேரருள்திரு. டாக்டர் ஹென்றி ஷர்மா நித்தியானந்தம் பேராயர் & தலைவர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.