மனசாட்சியில்லாத போராட்டம்! உறுதிமொழியை புறம் தள்ளிய அரசு மருத்துவர்கள்!

மனசாட்சியில்லாத போராட்டம்! உறுதிமொழியை புறம் தள்ளிய அரசு மருத்துவர்கள்!

ஜி.கே.சேகரன்,

 அரசு மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் 13 ஆம் தேதி சரமாரியாக கத்தியால் குத்தினார்.

 இதில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜிக்கு அந்த மருத்துவமனையிலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை புறக்கணிப்பதாக அரசு மருத்துவர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

 இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவர்கள் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 சென்னையில் தாக்குதல் சம்பவம் நடந்த கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால் இந்த போராட்டம் நடந்தது.

 ஆனால் போராட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

 அதே போல் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ்  அணிந்து தர்ணா போராட்டம் நடத்தியதால், புற நோயாளிகள் பிரிவு பல இடங்களில் செயல்படவில்லை.   வேலூர் வட்டம், வேலூர் பழைய பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனை கொணவட்டம் அரசு ஆரம்பசுகாதார நிலையம் உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவு முழுமையாக செயல்படவில்லை.

 அடுக்கம்பாறை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் புற நோயாளிகள் பிரிவு இயங்கவில்லை.  இந்த போராட்டமானது, அரசு மருத்துவர்கள் சரவணன் ,பிரகாஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

 இந்நிலையில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு  மருத்துவமனைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பு முடிந்ததும் அதேபோல் அரசு பணி கிடைத்ததும் மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழியை இந்த போராட்டத்தின் வாயிலாக மீறி இருப்பதால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.