பலான படம் பார்த்ததை கண்டித்த தாத்தா! விஷம் வைத்துக்கொன்ற பாசக்கார பேரன்!

உ.சசிகுமார்,
ஆபாச படங்களை பார்த்து வந்த பேரனை கண்டித்த தாத்தா கண்டிக்க போய் அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார்.
நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு எதிரே பல ஆண்டுகளாக ஃபாஸ்ட் ஃபுட் கடை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இரு தினங்களுக்கு முன்பு சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. பரிசோதனையில் அவர் சாப்பிட்ட சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்தக் கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வந்து சீல் வைத்து சென்றனர்.
போலீஸார் வந்து விசாரித்த போது, அந்தக் கடையில் அன்றைய தினம் 100 பேர் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு எல்லாம் ஒன்றும் ஆகவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீஸார், உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினரை விசாரித்த போது தான்உண்மை தகவல்கள் வெளியாகின.
சம்பவதன்று அந்தக் கடையில் கொசவப்பேட்டையைச் சேர்ந்த பகவதி என்பவர் சிக்கன் ரைஸ் வாங்கி சென்றுள்ளார். கல்லூரி மாணவரான இவர், இ - சேவை மையத்தில் பகுதிநேரமாக வேலை செய்து வந்தார். இதனிடையே, கடந்த சில மாதங்களாக பகவதி, செல்போனில் ஆபாசப் படம் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த வாரம் பகவதி ஆபாசப் படம் பார்த்து கொண்டிருந்த போது அவரது தாத்தா சண்முகநாதன் அதை பார்த்து பேரனை கண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பேரன் பகவதி, தாத்தா உட்பட மொத்த குடும்பத்தினரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதையடுத்து, அந்த ஃபாஸ்ட் புட் கடைக்கு சென்று 7 சிக்கன் ஃப்ரைடு ரைஸை பகவதி வாங்கியுள்ளார். பின்னர் அதை எடுத்து வந்து வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுத்துள்ளார்.
பகவதி வாங்கி தந்த சிக்கன் ரைஸை சாப்பிட்ட தாத்தா சண்முகநாதனும், தாயாருக்கும் வாயில் நுரை தள்ளியது.
அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது தாத்தா உயிரிழந்தார். தாயார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் பகவதியை கைது செய்தனர்.
நல்ல வேளையாக பகவதியின் தம்பிகள் உள்ளிட்ட உறவினர்கள் சிக்கன் ரைஸை சாப்பிடவில்லை என்பதால் உயிர்தப்பினர்.