படிகட்டே இல்லாத அரசு பேருந்து!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
படிகட்டு இல்லாத அரசு பேருந்தில் பொதுமக்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழகத்தைப் பொருத்தவரை அரசு பேருந்துகள் பல பராமரிப்பு இன்றி பயன்பாட்டுக்கு இயக்கப்படுகிறது. குறிப்பாக பின் பக்கம் இரண்டு இரண்டு டயர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒத்தை டயர் வைத்து இயக்குகிறார்கள். பஸ் ஓடிக்கொண்டிருக்கும் போதே பலகை உடைந்து தரையில் விழுகிறார்கள்.
இப்படியாக ஏழை பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் அரசு பேருந்துகள் உள்ளன. இந்நிலையில், நெல்லை மாவட்டம், மூலக்கரைப்பட்டிக்கு சென்ற அரசு பேருந்தின் பின்புற படிக்கட்டுகள் இல்லாமல் மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் முன்பக்கம் வழியாக மட்டுமே பயணிகள் ஏறுவதற்கு படிக்கட்டுகள் இருக்கின்றன.
அந்த பேருந்தில் பயணிக்கக்கூடிய பயணிகள், மாணவ-மாணவிகள் அதே வழியாக எகிறி குதித்து இறங்கவேண்டிய நிலை இருக்கிறது.
இந்த விஷயம் குறித்து சம்மந்தப்பட்ட டெப்போ அதிகாரிகளுக்கு தெரிவித்த போது, என்னங்க செய்வது, எத்தனை தடவை சொன்னாலும் அதை சீர்படுத்த மாட்டேன் என்கிறார்கள் என்று புகார் தாரர்களிடமே முறையிடுகின்றனர் வெட்கமே இல்லாமல்.