ஆளுநர் மாளிகையை குறிவைத்த பெட்ரோல் குண்டு ஆசாமி! போதையில் அடாவடி! மத்திய உளவு துறை ஆய்வு!

ம.பா.கெஜராஜ்,
ரவுடி ஒருவர் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
சென்னை கிண்டியில்லுள்ள ஆளுநர் மாளிகையில் உட்புறமும் வெளிபுறமும் எப்போதுமே பலத்த போலீஸ் பாதுகாப்பு இருக்கும். துப்பாக்கி ஏந்திய போலீஸாரும் அவ்வப்போது நிறுத்தப்பட்டிருப்பார்கள். அனுமதி பெற்று உள்ளே செல்லவேண்டுமானாலும் பலத்த சோதனைகளை சந்திக்க வேண்டும்.
அப்படியிருக்க நேற்று மதியம் 3 மணியளவில் கிண்டி சர்தர் படேல் சாலையில் வந்த ஒருவர், தான் திடீரென மறைத்து தயாராக கொண்டு வந்த பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகை நோக்கி வீசினார். அது ஆளுநர் மாளிகை நுழைவாயில் (எண் 1) முன்பு போடப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் முன் விழுந்து வெடித்து சிதறி லேசாக தீப்பற்றியது.
இதனால் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் உஷாராகி பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓட முயன்ற இளைஞரை விரட்டிப் பிடித்தனர். அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டில் ஒன்று விழுந்து உடைந்தது. இதையடுத்து, அவர் மறைத்து வைத்திருந்த மேலும்2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, எதற்காக பெட்ரோல் குண்டு வீசினாய் என்று போலீஸார் கேட்டதற்கு, 'ஆளுநர் என்னை சிறையில் இருந்து விடுதலை செய்ய ஒப்புதல் வழங்கவில்லை. 'நீட்' தேர்வுக்கு ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டுவீசினேன்' என்று போதையில் வாக்குமூலம் அளித்துள்ளார்
பின்னர் அந்த இளைஞர் கிண்டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, கிண்டி காவல் நிலையத்தில் வைத்து அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார், உதவி ஆணையர் சிவா ஆகியோர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் சென்னை நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத்(42) என்பதும், அவன் மீது 14 வழக்குகள் உள்ளதாக கண்டுபிடித்தனர்.
மேலும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடியாக (சி - பிரிவு) உள்ளார். இவர் மீது ஏற்கெனவே 4 கொலை முயற்சி வழக்கு உள்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு மாம்பலத்தில் உள்ள 'டாஸ்மாக்' கடையிலும், 2017-ம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். மேலும், சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த ஆண்டு பிப். 10-ம் தேதி பெட்ரோல் குண்டு வீசிய வழக்கிலும் கைது செய்யப்பட்டிருந்தார்.
குற்ற வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர்தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.
வெளியில் வந்தவுடன் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டு பிடிபட்டுள்ளார்.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குரல் கொடுத்துள்ளார்.
மேலும் இந்திய ஜனாதிபதி தமிழகத்திற்கு வர உள்ள நிலையில் பாதுகாப்பு பணிகள் தீவிரமடைந்து இருக்கிறது அப்படி இருக்க கவர்னர் மாளிகையில் நடந்த மேற்படி சம்பவத்தை குறித்து மத்திய உளவுத்துறையினர் ஆளுநரிடம் ஆலோசனை நடத்தினர்.