இப்போதைக்கு இரண்டு அமைச்சர்கள் மாற்றமில்லை!

ம.பா.கெஜராஜ்,
இரண்டு அமைச்சர்களை குறிவைத்து மாற்றம் குறித்த சப்ஜெக்ட் பேசப்பட்டு வருகிறது.
அமைச்சரவையில், சம்மந்தப்பட்ட துறைகளில் கை தேர்ந்த சட்டமன்ற மன்ற உறுப்பினர்களை முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார் என்று ஆரம்பத்தில் பேசப்பட்ட நிலையில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றம் என்பது அதிரடியாக பார்க்கப்பட்டது.
மேலும் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் சமீபத்தில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் கள்ளச்சாராய விவகாரமும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டதும் பேசு பொருளாக ஆனது.
இந்த பிரச்சினையில் இரண்டு அமைச்சர்களின் பெயர்கள் அடிபட்டன.
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர்களுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் இணைந்திருக்கும் புகைப்படம் (மரூர் ராஜா) வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. கள்ளச் சாராயம் விற்பவர்களுக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதே போல், மதுவிலக்குத் துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தார் என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் அதிகமாக வசூலிப்பதாக வந்த புகாரும் சேர்ந்து கொண்டது.
இந்த சூழலில், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது, பாஜக செந்தில் பாலாஜியை குறிவைத்து செயல்படுவதாக முதல்வர் தரப்பு கருதுகிறதாம்.
அதனாலே அவருக்கு எதிராக சில விஷயங்கள் கிளப்பிவிடப்படுவதாக கருதுகிறதாம்.
இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் திமுக வை பலப்படுத்தும் வேலையில் செந்தில் பாலாஜி பிரமாதமாக செயல்படுவது மற்றும் ஆவடி நாசரை ஏற்கனவே அமைச்சரவையிலிருந்து நீக்கிய நிலையில் செஞ்சி மஸ்தான் மீது நடவடிக்கை எடுத்தால் அது சிறுபாண்மையின மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தலைமை நினைக்கிறதாம்.
ஆகவே இன்னும் சில காலத்துக்கு தமிழ்நாடு அமைசரவையில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது.