லஞ்ச ஒழிப்பு வழக்கு சந்தித்த அறிவொளிக்கு பள்ளி கல்வி இயக்குநர் பதவி!

ம.பா.கெஜராஜ்.
லஞ்ச ஒழிப்பு பிரிவில் வழக்கை சந்தித்த அறிவொளிக்கு பள்ளி கல்வி இயக்குநர் பதவி அளிக்கப்பட்டிருப்பது பலரின் புருவத்தை உயர்த்தியிருக்கிறது.
இது பற்றின விவரம் வருமாறு,
கல்வித் துறையின் உச்சபட்ச பதவியாக கருதப்படுவது பள்ளிக் கல்வி இயக்குநர் பதவி. இந்த பதவி இதே துறையில் படிப்படியாக பதவி உயர்வு பெற்று மேலே வருபவர்களுக்கே அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த அதிமுக ஆட்சியின் போது, பள்ளிக்கல்வி ஆணையர் என்ற புதிய பதவி கொண்டு வரப்பட்டது. இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்தனர்.
நிர்வாக வசதிக்காக என கூறப்பட்டு, முதல் ஆணையராக சிஜிதாமஸ் நவம்பர் 2019ல் நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிக்கல்வித் துறையில் இயக்குநர் நிலையில் உள்ள உயர் அதிகாரிகள் தான் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டனர்.
இது ஆரோக்கியமான போக்காக தொடர்ந்து வந்தது. அதே துறையில் இருந்து உயர் பதவிக்கு வருபவர்கள், பிரச்சினையை சரியாக கையாண்டு விரைவாக தீர்வு காணவும், புதிய விஷயங்களை சரியான திட்டமிடுதலுடன் அமல்படுத்தவும் முடிந்தது அதற்கு ஏன் தடை என்று சங்கங்கள் கேள்வி எழுப்பின.
மேலும், 150 ஆண்டுகால நடைமுறையை, சரியான திசையில் சென்று கொண்டிருக்கும் பள்ளிக்கல்வித் துறையை சிக்கலில் கொண்டு போய் விட்டு விடாதீர்கள். அந்த துறை சார்ந்த அனுபவம் வாய்ந்தவர்களை அதிகாரிகளாக நியமித்தால் தான் பெரும் உதவியாக இருக்கும் எனப் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் திமுக ஆட்சி வந்த பின்னர் 2021 மே மாதம் புதிய ஆணையராக க.நந்தகுமார் நியமனம் செய்யப்பட்டார்.
அப்படியிருக்க நேற்று முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது.
பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணையில், தொடக்கக் கல்வி இயக்குநராக இருந்த க.அறிவொளி, பள்ளிக்கல்வி இயக்குநராக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இயக்குநர் பதவிக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கல்வித் துறையில் சுமார் 30 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர் அறிவொளி. முந்தைய திமுக ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அறிமுகம் செய்யப்பட்ட பொது நூலகத் துறை இயக்குநர் பதவியில் 2008 முதல் 2010 வரை இருந்தார்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளராக பதவி வகித்துள்ளார்.
இதில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக இருந்த போது, கல்வியியல் ஆராய்ச்சிக்காக வல்லுநர் குழுவை கூட்டாமல் போலியான ரசீதுகளை தயாரித்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக டிபிஐ வளாகம், அறிவொளி வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்தது பெரும் சர்ச்சையானது.
ஆக அதிமுக அரசின் போது காலாவதியான இயக்குநர் பதவி திமுக ஆட்சியில் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே வழக்கை சந்தித்தவருக்கு அப்பதவி கொடுக்கப்பட்டிருப்பது தான் கவனிக்கக்கூடியதாக இருக்கிறது.
இது குறித்து முக்கிய அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், அறிவொளி மீது தொடரப்பட்ட வழக்கு பழி வாங்கும் நோக்கு ஆகும். அறிவொளி அவர்கள் திமுக ஆட்சி காலத்தில் நல்ல பல பணிகளை ஆற்றி பாராட்டு பெற்றவர். அவர் மீது திமுக முத்திரை குத்தப்பட்டது. அதன் பேரில் தான் சோதனை வழக்கு எல்லாம் வந்தது என்றார்.
அது சரி.