"உழவன் செயலியை" பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்! திருப்பத்தூர் ஆட்சியர் தகவல்!

ஆர்.ரமேஷ்,
விவசாயிகள் "உழவன் செயலியை" பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் "உழவன் செயலி" என்ற ஒரு செயலி உருவாக்கப்பட்டு விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலியானது மேலும் மேம்படுத்தப்பட்டு தற்போது 22 வகையான வேளாண் சார்ந்த சேவைகளை விவசாயிகள் பெற்றிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உழவன் செயலியை பயன்படுத்துவது எவ்வாறு?
இந்த சிறப்பு மிகுந்த உழவன் செயலினை ஆன்ராய்டு செல்போனில் "பிளே ஸ்டோர்" வழியாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த பின்னர் அதில் விவசாயிகள் தங்களது அடிப்படை தகவல்களான பெயர், மாவட்டம், வட்டாரம், முகவரி தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவுசெய்து கொண்டு உழவர் செயலியை பயன்படுத்தலாம்.
இந்த செயலியின் முகப்பு பகுதியில் 22 வகையாக சேவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவைகளை எளிதில் தெரிந்துக்கொண்டு பயன்படுத்தும் வகையில் தமிழ் மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலமாக ஒன்றிய, மாநில அரசினால் வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை, விதை சான்றளிப்பு துறை, வேளாண்மை பொறியியல் துறை, நீர்வடி பகுதி திட்டம் மற்றும் வேளாண்மை பல்கலை கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதையும் அவற்றிகுரிய மானியம் மற்றும் தொழில்நுட்பங்களை பெற முடியும்.
மேலும், இந்த “உழவன் செயலி" மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை முன்பதிவு செய்தல், பயிர்களுக்கான காப்பீடு விவரங்கள். உரங்கள் மற்றும் விதைகளின் இருப்பு விவரங்கள், தங்கள் பகுதி உதவி வேளாண்/ தோட்டக்கலை அலுவலர் வருகை பூச்சி நோய் தாக்குதல் கண்காணிப்பு மற்றும் அவற்றிகுரிய தடுப்பு முறைகளை அறியலாம்.
வேளாண் இயந்திரங்களின் இருப்பு மற்றும் வாடகை விவரங்கள், விவசாயிகள் தங்களின் விளைப்பொருட்களுக்கான உண்மையான சந்தை விலை தெரிந்துக்கொள்ளும் வசதி மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சந்தைகளின் விலை விவரங்கள், மழைப்பொழிவு, அணைகளின் நீர் மட்டம், வேளாண் செய்திகள் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை தெரிந்துக்கொள்ளும் ஒரு தளமாக இந்த "உழவன் செயலி" உள்ளது.
எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் அனைவரும் இந்த "உழவன் செயலி" யினை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். திருப்பத்தூர் மாவட்டம்.