மாவட்ட செயலாளர் கொலை! போலிஸ் மெத்தனம் என தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்!

மாவட்ட செயலாளர் கொலை! போலிஸ் மெத்தனம் என தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்!

 கு.அசோக்,

 மக்கள் தேச கட்சி மாவட்ட செயலாளர் கொலை - கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி அக்கட்சியினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்.

 ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விவேகானந்தன்(38). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவர் இந்திய மக்கள் தேச கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலவில் உள்ளது.

  இந்நிலையில் நேற்று விவேகானந்தன் தனது நண்பரான அஜித் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வாலாஜாபேட்டையில் இருந்து காவேரிப்பாக்கம் நோக்கி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமைதாங்கி அருகே வந்து கொண்டிருந்த போது நீண்ட நேரமாக பின் தொடர்ந்து வந்த கார் இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் நிலை தடுமாறு கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.

  இதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய காரில் இருந்து கீழே இறங்கிய நான்கு மர்ம நபர்கள் காயமடைந்து நிலையில் சாலையில் கிடந்த விவேகானந்தனை சரமாரியாக வெட்டி அருகே உள்ள ஏரிக்கரை மீது தூக்கிச் சென்று முகத்தை சிதைத்தும் வலது கையை துண்டித்தும் கொடூரமாக கொலை செய்தது விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

  தப்பியோடும் போது உயிர் போய்விட்டதா என்பதை உறுதிபடுத்திக்கொண்டு எஸ்கேப் ஆனார்கள் என்று கூறப்படுகிறது.

 இந்நிலையில், விவேகானந்தனுடன் இருசக்கர வாகனத்தில் வந்த அவரது நண்பரான அஜித் காயங்களுடன் மீட்க்கப்பட்டார்.

மேலும் உயிரிழந்த விவேகானந்தனின் உடல் வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

   மேலும் விவேகானந்தன் கொலை செய்யப்பட்ட வழக்கு காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் விசாரணை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில்,

கொலையுண்ட விவேகானந்தனின் உறவினர்கள் மற்றும் இந்திய மக்கள் தேசம் கட்சியினர் அப்பகுதி கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர்.

 கொலை சம்பவம் நடந்த சுமைதாங்கி அருகே, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கொலை குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் எனவும் காவல் துறையினரின் விசாரணை மெத்தனமாக நடைபெறுவதாக கோஷமிட்டனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் க்ரிஷ் யாதவ் தலைமையிலான காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

 இந்த சாலை மறியல் காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.