விழா கோலத்தில் தருமபுரம் ஆதீனம்! தொடரும் சம்பிரதாயங்கள்!

விழா கோலத்தில் தருமபுரம் ஆதீனம்! தொடரும் சம்பிரதாயங்கள்!

ஜி.பாலகுரு,

 தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டினப்பிரவேசம் திருவிழா, ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் அதையொட்டிய சம்பிரதாயங்கள் நெடைபெற்று வருகின்றன.

   மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது.

  மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கொடியேற்றம்நடைபெற்ற நிலையில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

 தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது.  

 சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள்  கொடிமரத்திற்கு எழுந்தருளினார், அதனை அடுத்து வேத மந்திரங்கள் முழங்க ஆலய கொடி மரத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. 

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 18ஆம் தேதி சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் இருபதாம் தேதி பஞ்சமூர்த்திகள் திருத்தேர் உற்சவமும் 21ஆம் தேதி காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

  மேலும் ஆதீன மடத்தில் தருமபுர ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் குருபூஜை பெருவிழா 10 நாள் உற்சவமாக நடைபெறுகிறது.

   இதனை முன்னிட்டு திருநெறிய தெய்வத்தமிழ் மாநாடு நடைபெற உள்ளது.

 பல்வேறு தமிழ் சைவம் சார்ந்த கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.

 விழா நிறைவாக 11ம் நாளாக 22 ஆம் தேதி ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பல்லக்கில் வீதி உலா வரும் பட்டினப்பிரவேசம் காட்சியும் நடைபெறுகிறது.

 கொடியேற்று விழாவில் தருமபுர ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் தொடர்சியான சம்பிரதாய நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.