ஊரடங்கு:- ரவுண்டுகட்டி பணியாற்றிய போலிசார்!விதிமீறிய டிராஃபிக் சார்ஜெண்ட்!
கு.அசோக்,
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில், மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலிசார் ரவுண்டு கட்டி பணியாற்றினார்கள். (சில இடங்கள் இதில் விதிவிலக்காக இருந்தது).
இவ்வாறு பணியில் ஈடுபட்ட போலிசார், ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய வாலிபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களிடம் அபராதம் விதித்து அறிவுரை வழங்கினர்.
இருசக்கர வாகனங்களில் போலியாக ஒட்டப்பட்ட பிரஸ் ஸ்டிக்கரை அகற்ற வைத்தனர்.
கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடந்த வாரம் 9-ந்தேதி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் 2-வது வாரமாக இன்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
முழு ஊரடங்கையொட்டி அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை முன்னிட்டு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தன.
அந்த வகையில், பால், பெட்ரோல் வாகனங்கள், பத்திரிகையாளர்களின், சரக்கு வாகனங்கள், துப்புரவு பணியாளர்களின் வாகனங்கள் உள்ளிட்டவை அனுமதிக்கப்பட்டன. உணவகங்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தபோதிலும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் ஒரு லட்சட்சத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதில் சென்னையில் 312 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற்றது.
தமிழகமெங்கும் அத்தியாவசிய பணிகளுக்காக வாகனங்களில் சென்றவர்களை அடையாள அட்டையை பார்த்து உறுதி செய்த பிறகே போலீசார் அனுமதித்தனர்.
தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், சென்னையை போன்று வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர்,இராணிப்பேட்டை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் போலிசார் குழு அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. 1 லட்சம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு வேலூர் போலிசார் கபசுர நீர் கொடுத்தனர். இம்மாவட்டத்தில் இன்று (16.01.2022) சுமார் 700 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
57 இடங்களில் தடுப்புகள் அமைத்தும் மாநில எல்லைகளில் உள்ள 6 சோதனை சாவடிகளில் கூடுதல் போலிசார் நியமிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டனர்.
குறிப்பு:- பற்பல போக்குகளுக்கும், வரத்துகளுக்கும் காவலாய் இருந்தவர் டிராஃபிக் சார்ஜெண்ட் செல்ல பாண்டியன். அவருக்கு பணியிட மாற்றம் கிடைத்துள்ளது.
அதற்காக இன்று அவர் குடியாத்தம் அசைவ ஓட்டலில் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அதே போல் தனியார் விடுதி ஒன்றில் நூற்றுக்கணக்கானோரை சந்தித்து சால்வை பெறும் நிகழ்ச்சியும் நடத்தியிருக்கிறார்.
அரசு விதித்த ஊரடங்கை மீறி செல்ல பாண்டியன் கொண்டாடிய பிரிவு உபச்சார விழா தொடர்பாக இன்று சோஷியல் மீடியாக்களில் புகைப்படங்கள் வெளியாகிக்கொண்டிருக்க, சம்மந்தப்பட்ட டிஎஸ்பி அதற்கு பாராட்டு தெரிவித்தாராம்.
அய்யோ...அய்யோ...ஊருக்குத்தான் உபதேசம்?