மேற்கு வங்க அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு! இது நான்காவது முறையாம்!

ஜே.தேவபிரகாஷ்,
வரும் 26ம் தேதி இந்திய குடியரசு தினத்தையொட்டி தலைநகர் புதுடெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்புக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த அணிவகுப்பில் அனைத்து மாநில அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இவற்றில் அந்தந்த மாநில கலை பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை பிரதிபலிக்கும். ஆனால் இந்த அணிவகுப்பில் மேற்கு வங்க மாநிலம் சார்பில் அலங்கார ஊர்தி பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. இது அம்மாநில முதலமைச்சர் மம்தாபானர்ஜியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இது தொடர்பாக மேற்கு வங்கு முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் தெரிவித்திருப்பதாவது,
மத்திய அரசின் இந்த முடிவால் நான் ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மத்திய அரசின் இந்த அணுகுமுறையால் மேற்கு வங்க மக்கள் அனைவரும் மிகவும் வேதனையடைந்துள்ளனர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வங்கம் முன்னணியில் இருந்தது மற்றும் பிரிவினையின் மூலம் நாட்டின் சுதந்திரத்திற்காக மிகப்பெரிய விலையை செலுத்தியுள்ளது.
நேதாஜி மற்றும் நாட்டின் சுதந்திரத்துக்கு அர்ப்பணித்த சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் மேற்கு வங்காள அரசின் அலங்கார ஊர்திக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, மத்திய அரசு இதுகுறித்து மறுபரிசீலனை செய்து குடியரசு தினவிழாவில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு தமது கடிதத்தில் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இது நான்காவது தடவையாகும். இதற்கு முன்னர் 2015, 2017 மற்றும் 2020 ஆண்டுகளில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.