பொதுவழியை மறித்த திமுகவினர்! தட்டி கேட்டவர் தாக்கப்பட்டார்! சாலை மறியலால் பரபரப்பு!

பொதுவழியை மறித்த திமுகவினர்! தட்டி கேட்டவர் தாக்கப்பட்டார்! சாலை மறியலால் பரபரப்பு!

 ஜி.கே.சேகரன்,

பொது வழியை ஆக்கிரமித்திருப்பதை தட்டி கேட்ட நபர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த அரசம்பட்டி பகுதியை சேர்ந்த அனுமுத்து, அவரது தம்பி திமுக கிளை செயலாளராக உள்ள ஆனந்தன் ஆகியோர், அப்பகுதியில் உள்ள பொதுவழி மற்றும் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து சிமெண்ட் குடோன் கட்டியுள்ளனர் என கூறப்படுகிறது. இதனால் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வருவாய்த்துறை மற்றும்  திருப்பத்தூர் கிராமிய போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

 இதனைத் தொடர்ந்து அப்பகுதி சேர்ந்த சிவகுமார் என்பவர் பால் வாங்குவதற்காக விநாயகபுரம் பஸ் ஸ்டாப்புக்கு சென்றுள்ளார்.

 பின்னர் சிவகுமாருக்கும், அனுமுத்துவிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் சிவகுமாரை  திமுக வைச் சேர்ந்த அனுமுத்து அவரது மகன் கார்த்திகேயன், திமுக கிளை செயலாளர் ஆனந்தன் ஆகியோர் கடுமையாக தாக்கி உள்ளனர்.

 இதில் பலத்த படுகாயம் அடைந்த சிவக்குமாரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

  இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் 70-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூரிலிருந்து புதூர்நாடு செல்லும் சாலையில் அரசு பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  இச்சம்பவம் அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி,  தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதி அளித்ததின் பெயரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 சாலைமறியலால், அப்பகுதியில் ஒருமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.