அரசு விழாவை அரசியல் விழாவாக மாற்றிய திமுகவினர்! அதிமுக பெண் கவுன்சிலர் தர்ணா!!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே அரசு தொழில் பயிற்சி நிறுவனத்தின் கட்டமைப்பு பணிமனை திறப்பு விழாவில் அதிமுக பெண் கவுன்சிலரை மேடையில் இருந்து கீழே இறக்கிய திமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.¢ தாழ்த்தப்பட்ட பெண் கவுன்சிலர் என்பதால் தன்னை அவமதித்ததாக கூறி பெண் கவுன்சிலர் மற்றும் அதிமுகவினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் அரசு தொழில் பயிற்சி நிறுவனத்தின் பணிமனை அமைக்க 3.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 90% கட்டிட பணிகள் முடிவடைந்த நிலையில், ஆட்சி மா?ற்றம் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொழில் பயிற்சி நிறுவனத்தின் முன் கட்டமைப்பு கட்டுமான பணிமனை அரசின் சார்பில் முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
அப்போது ஆலங்காயம் ஒன்றித்துக்குட்பட்ட 4வது வார்டு அதிமுக வசந்தி அருள் பெண் கவுன்சிலருக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்ததின் பெயரில் விழாவில் கலந்து கொண்டார்.
பெண் கவுன்சிலர் மேடையில் அமர்ந்திருந்த போது திமுகவினர் அவரை அவமதிக்கும் வகையில் அவரை கீழே இறக்கியதாக சொல்லப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த பெண் கவுன்சிலர் மற்றும் அதிமுகவினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இது குறித்து பெண் கவுன்சிலர் வசந்தி அருள் மற்றும் அதிமுக முன்னாள் வார்டு கவுன்சிலர் சரவணன் கூறுகையில், சமத்துவம் பேசும் திமுக அரசு தாழ்த்தப்பட்ட பெண்ணை மேடையை விட்டு கீழே இறக்கினர்.
வாணியம்பாடி தொகுதி நிகழ்ச்சியை அத்தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினரை வைத்து நடத்தாமல், ஜோலார்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினரை வைத்து நடத்துகின்றனர் இது அரசு விழாவா அல்லது அரசியல் விழாவா என்றனர்.