அளவுக்கு அதிகமாக மண் எடுக்கும் குவாரியை மூடக்கோரி புகார் மனு!

கு.அசோக்,
சட்டத்திற்கு புறம்பாக அளவுக்கு அதிகமாக மண் எடுக்கும் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
வேலூர் வட்டம், பாலமதி ஊராட்சி செட்டேரி கிராமப் பகுதியில் வி கே மகேஷ் என்பவரின் நிலத்திலிருந்து மண் எடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அங்கு அரசு அனுமதித்துள்ள அளவிற்கு அதிகமாக சட்டவிரோத மண் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
குவாரியில் வெடிவைத்து கல் உடைப்பதால் தங்களால் அந்த பகுதியில் வாழ முடியவில்லை என்றும் வீடு, உணவுப் பொருள் மற்றும் தங்களின் மீதும் குப்பைகள் வந்து சேர்வதாகவும் மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்புவதற்கே பயமாக இருப்பதாகவும் கற்கள் வந்து மேலே விழுவதாகவும் அப்பகுதி மக்கள் பலவிதமான குற்றச்சாட்டுகளை வேதனையோடு எடுத்து வைக்கின்றனர்.
அனுமதிக்கப்பட்டுள்ள அளவிற்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டு இருந்தால் மண் எடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் குவாரியை மூடுவதற்கு உத்தரவிட கோரியும் முன்னாள் எம்எல்ஏ லதா தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. அவர்களிடம் மனு அளித்துள்ளனர்.
ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக கிராம மக்கள் ஒன்றிணைந்து குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்
முன்னாள் எம் எல் ஏவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளருமான லதா கூறுகையில், அரசு அளித்துள்ள அனுமதிக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அருகில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமானால் அந்த மண் குவாரியை தடுத்து நிறுத்தி அந்த ஊராட்சியில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே கோரிக்கை என்றும், எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மண் குவாரி தடுத்து நிறுத்தி விவசாயி கோபால் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய பாதிக்கப்பட்ட மக்கள் குவாரியால் அந்தப் பகுதியில் வாழவே முடியவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.