சமுதாய பின்னணியும் - குடற்புழு மாத்திரையும்! சித்தர்களை காட்டி ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேச்சு!

ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்
பள்ளியில் தேசிய குடற்புழு நீக்கம் நாளையொட்டி 920 மாணவியர்களுக்கு
குடற்புழு நீக்கம் மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது: -
நமது மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைளுக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கும் அல்பெண்டசோல் குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும்.
நம் முன்னோர்கள் சொன்ன பழைய பழக்க வழக்கங்களை நாம் கடைபிடிப்பதில்லை.
தேரையர் என்ற சித்தர் உடல் ஆரோக்கியத்தை பற்றி பாலுண்போம்;எண்ணெய்பெறில், வெந்நீரில் குளிப்போம்; பகல் துயிலோம்; இரண்டு அடக்கோம்; ஒன்றை விடோம்; இடது கையில் படுப்போம்! மூலம்சேர் கணிநுகரோம்; முதல்நாளிற் சமைத்தகறி அமிர்தெனினும் அருந்தோம்; மூத்த தயிர் உண்போம்; மண்பரவு கிழங்குகளில் கருணையன்றிப் வேறொதுவும் புசியோம்; என்று சொல்லியிருந்தார்.
பழம்பெருமைகளை நாம் தெரிந்துக்கொள்ளவில்லை. மஞ்சள் காமலை என்ற நோய்க்கு சித்த மருத்துவத்தில் 3 வேலை மருந்து உண்டால் மஞ்சள் காமாலை நோய் காணாமல் போய்விடும். நம் முன்னோர்கள் வைத்த பல மகத்துவமான நடைமுறை வாழ்க்கையில் உணவே மருந்து என்று சொன்னார் திருமூலர். நாம் சாப்பிடும் உணவு தான் மருந்து. இப்பொழுது, நாம் பராம்பரிய வழக்கத்தை அடியோடு விட்டுவிட்டு, வேறு உணவு பழக்கத்திற்கு மாறிவிட்டோம். சிறுதானிய உணவு வகைகளை நாம் உபயோகப்படுத்துவதில்லை.
நம் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம், திருவள்ளுவர் சொல்வதை போல்
'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்” நோய்க்கான காரணம் என்னவென்று தெரிந்து கொண்டாலே அதை தீர்த்து விடலாம். பெண் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். ஒரு சமுதாயம் நல்லா இருப்பதற்கு, பெண்கள் மிகவும் பாதுகாப்புடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும். நீங்க நல்லா இருந்தா தான் ஆண்கள் நலமாக இருக்க முடியும். ஏனென்றால், பெண்மணிகளிடம் இருந்து தான் ஆண்கள் வருகிறார்கள்.
புளிச்சக்கீரை வகைகள் அதிகமாக உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் இரும்பு சத்து அதிகமாக உடலுக்கு கிடைக்கப்பெறும், சிவப்பணுக்கள் ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கு உதவுகிறது.
இந்த ஆக்சிஜன் கொண்டு செல்வது அதிகமாக இருந்தால் தான் வளர்ச்சிதை மாற்றம் ஒழுங்காக செயல்படும். உடலுக்கு ஆற்றல் அதிகமாக கிடைக்கப்பெறும்.
நமது உடலில் ஹீமோகுளோபின் அளவு நமது உணவு பழக்க வழக்கத்தையும் குடற்புழுவினாலும் குறைகிறது. கருவுற்ற தாய்மார்கள் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் இதனால் ஹீமோகுளோபின் குறைய ஆரம்பிக்கும். இதன் மூலம் ரத்த சோகை வருவதற்கு காரணமாக இருக்கும்.
கருவுற்ற தாய்மார்கள் ஊட்டச்சத்து உள்ள காய்கறிகள் கீரை வகைகள் உட்கொள்ள வேண்டும்.
சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் குடற்புழு இருக்கக்கூடாது. மேலும் பிறக்கின்ற குழந்தை ரத்தசோகையினால் பிறக்கிறது. குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் 18 வயதிற்குள்ளாக ஒரு பெண் குழந்தை மனதளவிலும் உடல் அளவிலும் தகுதியாக இருக்க மாட்டார்கள்.
பெண் குழந்தைகள் சுதந்திரமாக கல்வி கற்று ஒரு வேலை வாய்ப்பிற்கு சென்று பெற்றோர்களை நேசித்து அரவணைத்து பின்னர் உங்களுடைய குழந்தைகளை அரவணைக்கின்ற இடத்தில் இருப்பீர்கள். நீங்கள் உங்களை சந்தோஷமாக வைத்திருக்கின்ற காலம் மிகவும் குறைவு. குழந்தை திருமணம் செய்து குழந்தை பிறக்கின்ற பொழுது இரத்த சோகை நோயுடன் பிறக்க வாய்ப்புள்ளது. மேலும், தாய்மார்களும் குழந்தைகளும் இறக்கும் நேரிடும்.
அதனால் இந்த குடற்புழு மாத்திரையுடைய சமுதாய பின்னணியும், உங்களுடைய முன்னேற்றதற்கான காரணமும் ஹீமோகுளோபின் உங்களுக்கு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் வழங்குவதற்காக துவக்கி வைத்து, இன்றைய தினம் நமது மாவட்டத்தில் துவக்கி வைத்திருக்கின்றோம்.
இதன் மூலமாக 4.9 லட்சம் நபர்கள் நமது மாவட்டத்தில் பயனடையுள்ளார்கள். இன்றைய தினம் அங்கன்வாடிகளிலும், மருத்துவமனைகளிலும் பள்ளிகளிலும் குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இன்றைய தினம் அனைவருக்கும் வழங்குவோம். இதில் பெறாதவர்கள் 21ஆம் தேதி தொடர்ந்து வழங்கப்படும். ஆகவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைவரும் இந்த மருந்தினை உண்ணுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
இம்முகாமில் இணை இயக்குனர் மருத்துவப் பணிகள் மரு.மாரிமுத்து, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மரு.செந்தில், முதன்மை கல்வி அலுவலர் திரு.மதன்குமார், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் மரு.பியூலா, நகர மன்ற துணை தலைவர் திரு.சபியுல்லா, வட்டார மருத்துவ அலுவலர் மரு.சௌந்தர்யா, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.