பாலாற்றில் சேமித்து வைக்கப்படும் இரசாயன குப்பை! மாநகராட்சி ஊழியர்களின் அடாவடி!
ம.பா.கெஜராஜ்,
வேலூர் பாலாற்றில் இராசயனம் கலந்த குப்பைகளை மலை போல் கொட்டி குவித்து வருகிறார்கள் மாநகராட்சி ஊழியர்கள்.
வேலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட காகிதப்பட்டறை வழியாக பாலாறு செல்கிறது. அங்கு கரையோரம் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரிப்பதற்காக மாநகராட்சி ஒரு கூடம் அமைத்துள்ளது. சுமார் 80 சென்ட் இடம் அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை சம்மந்தப்பட்ட ஊழியர்கள் சரிவர பயன்படுத்தாமல் குப்பைகளை பாலாற்றிலேயே கொட்டி குவித்து வருகிறார்கள்.
இங்கு மாநகராட்சி வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் தினமும் டன் கணக்கில் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இப்படி கொட்டி ஸ்டாக் வைக்கப்பட்டிருக்கும் குப்பையில் பிளாஸ்டிக்குகளும், மருத்துவமனை கழிவுகள் மற்றும் பேட்டரி உள்ளிட்ட இரசாயனம் கலந்த கழிவுகளும் நிறைய உள்ளன.
இதனால் பாலாற்று நிலத்தடி நீர் இரசாயனம் கலந்து பாழ்படும் சூழல் உள்ளது.
இந்த குப்பை மலைகளுக்கு பக்கத்திலேயே வேலூருக்கு தண்ணீர் சப்ளை செய்யும் ஆழ்துளை கிணறும் இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் காகிதப்பட்டறையில் இருந்து அங்கு வரும் கால்நடைகள் அந்த குப்பையை மேய்ந்து வருகிறது. அவற்றில் சில குறுகிய காலத்தில் இறந்து விடுகின்றன.
ஆற்றிலும், அதன் கரையிலும் இப்படி நிலத்தடி நீரை பாழ்படுத்தும் செயல்கள் நடப்பதை கட்டுப்படுத்த ஏற்கனவே நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
அந்த வகையில் "வேலூர் சிட்டிசன்ஸ் வெல்பர் பாரம்" சார்பில் சுப்ரிம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், ஏற்கனவே ஆற்றங்கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் இது போன்ற நீர் நிலையை பாழாக்கக்கூடிய அம்சங்கள் எதையும் செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.
ஆக திடக்கழிவு மேலாண்மை என்கிற பெயரில் இந்த குப்பை குடோன் அமைந்திருப்பதை சாக்காக வைத்துக் கொண்டு பாலாற்றில் இராசயனம் கலந்த குப்பைகளை கொட்டிவருவதால் அருகில் உள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் பாழ்பாடும், விவசாயத்துக்கு தண்ணீர் பயன்படாது.
இயற்கை நீர் ஆதாரங்கள் பாழ்படுத்தப்படும், என்பதால் பாலாற்றில் குப்பை கொட்டுவதை தடுத்து இயற்கை சூழலில் அப்பகுதி மக்களும், கால்நடைகளும் தொடர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் அவா.
இது குறித்து வேலூர் மாநகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில், பேருந்து நிலையம் அமைந்துள்ள 34 வது வார்டு, மார்க்கெட் அமைந்துள்ள 35 மற்றும் 28, மேலும் சத்துவாச்சாரி பகுதிகளில் உள்ள வார்டுகளில் இருந்தெல்லாம் பாலாற்றங்கரையில் உள்ள குப்பை கிடங்குக்கு குப்பைகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.
அந்த கிடங்கில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தனியாக பிரித்து அவற்றை விருதம்பட்டு பாலாற்றங்கரையில் செயல்படும் ஆர்.ஆர்.சி என்கிற இடத்துக்கு அனுப்புவோம். அங்கு அவர்கள் மக்கும் குப்பையை உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்துவிடுவார்கள். மக்காத பிளாஸ்டிக்குகளை பெண்டல் பெண்டலாக மிஷினில் பிரஸ் செய்து அவற்றை ஒப்பந்தத்தின்படி அரியலூருக்கு அனுப்பிவைக்கிறோம். ஒரு பெண்டல் 80 கிலோ வரும். லாரிக்கு ஏற்றபடி பெணடல்களை அவற்றை அனுப்பிவைப்போம்.
ஏற்கனவே சதுப்பேரியில் இந்த மாதிரி குப்பை கொட்டப்பட்டு வந்தது. அதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இங்கு கொட்டப்பட்டது. சதுப்பேரியில் குப்பையை அகற்றியதைப்போலவே பாலாற்றில் கொட்டப்பட்டிருக்கும் குப்பையையும் அகற்ற அதிகாரிகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.
கொஞ்சம் சீக்கிரமாக பேசி முடித்தால் நலம்.