வட மாநிலங்களை நம்பிய பாஜகவுக்கு ஏமாற்றமே மிச்சம்!

வட மாநிலங்களை நம்பிய பாஜகவுக்கு ஏமாற்றமே மிச்சம்!

 ம.பா.கெஜராஜ்,

 வடமாநிலங்களை நம்பியிருந்த பாஜக வுக்கு நான்கு கட்ட தேர்தல்களில் அவ்வளவாக திருப்தியில்லையாம்.  கடந்த பத்து ஆண்டுகளாக பாஜகவின் ஆட்சியில் ஏற்பட்ட சங்கடங்கள் மற்றும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை ஆகியவை ஜூன் 4 ஆம் தேதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

 543 இடங்கள் கொண்ட இந்திய மக்களவையில் 272 இடங்களை பிடிக்கும் கட்சியே தனிப்பெரும்பான்மை உடன் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்கிற நிலையில், ஏழு கட்ட தேர்தலில் தற்போது வரை நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.     

   2024 மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆட்சியை பிடிக்க இண்டியா கூட்டணி தீவிரம் காட்டி வரும் நிலையில் பாஜக இருப்பை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு விதமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

  ஆனாலும் கூட வட இந்திய வாக்காளர்களை நம்பியிருந்த பாஜகவுக்கு செம பின்னடைவு வந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியா கூட்டணிக்கு சாதகமாக மாறி வருகிறது.

  நான்கு கட்ட தேர்தல் முடிவுற்ற சூழலில் பாக்கி  3 கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் ஒன்றாம் தேதியுடன் முடிவடைகின்றன.

  இதுவரை வாக்குப்பதிவு நடந்து முடிந்த தொகுதிகள் 378. குஜராத் மாநிலம் சூரத் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலாலை தவிர்த்து மற்றவர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்று விட்டனர். காங்கிரஸின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு விட்டது. எனவே இந்த தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு விட்டது.

  "ஆனாலும் கூட இந்த வெற்றி செல்லாதது என்பதே யதார்த்தம். ஏனெனில் இப்போதெல்லாம் தேர்தலில் நோட்டாவும் போட்டியிடுகிறது. நோட்டா என்பது 543 தொகுதிகளிலும் சின்னமில்லாத வேட்பாளர் ஆவார். அப்படி மிஸ்டர் நோட்டா இருக்கும் போது வாக்காள்ளர்கள் அதற்குக்கூட வாக்களிக்கக்கூடும் அல்லவா. பின்னர் எப்படி முகேஷ் தலால் வெற்றி என அறிவிக்கமுடியும். இது தொடர்பான சர்ச்சை நீதிமன்றத்தை தொட்டிருக்கிறது."

  இது ஒரு பக்கம் இருக்கட்டும்  2014, 2019 ஆகிய தேர்தல்களில் பாஜகவிற்கு இருந்த நம்பிக்கை, 2024 தேர்தலில் இருக்கிறதா? என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலான வாக்காளர்களின் பதிலாக உள்ளது. 

   கடந்த இரண்டு தேர்தல்களை போல இம்முறை பாஜகவிற்கு எந்த ஒரு அஜண்டாவும் கைகொடுக்கவில்லை. தேதி அறிவிப்பதற்கு முன்பு வரை, பாஜக தனித்து 370 இடங்களில் வெற்றி பெறும் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் ஒவ்வொரு கட்டத் தேர்தல்களும் முடிவடையும் போது, பாஜகவின் நம்பிக்கை படிப்படியாக குறைவதை காண முடிகிறது.

  பிரச்சார கூட்டங்களில் தனித்துவமான முழக்கங்கள் எதையும் காண முடியவில்லை. குறிப்பாக பிரதமர் மோடியின் பிரச்சாரமானது மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருக்காது என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் இம்முறை எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. பிரதமர் பிரச்சாரத்தில் மத வெறுப்பு பிரச்சாரங்கள் பலமாக இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தென் மாநிலங்களில் ஒரு மாதிரியாகவும், வட மாநிலங்களில் வேறு விதமாகவும் அவர் பிரச்சாரம் செய்தார். 

  இந்தியாவை பொறுத்தமட்டில் காஷ்மிர் முதல் கன்னியாக்குமரி வரை மக்கள் ஒரே மாதிரி மனநிலையைத் தான் பிரதிபலிப்பார்கள். அதை பாஜக நூல் பிடிக்கவில்லை.

  இந்நேரத்தில் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இதை அமல்படுத்தும் செயல் திட்டங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ச்சியாக விளக்கி வருகின்றனர். ஆனால் பாஜகவின் பிரச்சாரங்களில் இந்துக்களின் தாலி, எருமை மாட்டில் பங்கு போடுவது, அம்பானி, அதானியின் கருப்பு பணம் போன்றவை சர்ச்சைக்கு ஆளாகி வருகின்றன.

 ஆகவே மக்கள் பாஜகவை ஆட்சிக்கட்டிலில் தொடர்ச்சியாக இருக்க அனுமதிக்க மாட்டார்கள் என்றே கள சூழ்நிலை உள்ளது.