மாற்று கட்சியிலிருந்து தாவிய 106 பேர் பாஜக வேட்பாளர்கள்! ஜூன் 4 க்கு பின்னர் சொந்த கூட்டுக்கு பறவைகள் திரும்புமா?

ம.பா.கெஜராஜ்,
மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில், எத்தனை பேர் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், கட்சியின் சார்பில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 435 வேட்பாளர்களில் சுமார் 25 சதவீதம் பேர் மாற்று கட்சியில் இருந்து பாஜவில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
கட்சித் தாவியவர்களுக்கு சீட் கொடுப்பது என்பது பல கட்சிகளிலும் நடைமுறையில் இருந்தாலும் கூட பாஜக வேட்பாளர்கள் 4ல் ஒருவர் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள் என்பது அந்த கட்சியினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாஜகவின் 435 வேட்பாளர்கள் பட்டியலில் 106 பேர், கடந்த 10 ஆண்டுகளில் ஏதோ ஒரு கட்டத்தில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் ஆவார்கள். அவர்களில் 90 பேர் கடந்த 5 ஆண்டுகளில் பாஜகவில் இணைந்துள்ளனர்.
இத்தகைய வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆந்திராவில் தான் அதிகமாக உள்ளது. அங்கு வெவ்வேறு கட்சியில் இருந்து வந்த ஆறு முக்கிய பிரபலங்கள் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மட்டுமின்றி, தற்போதைய கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகியும் அடங்குவர்.
தெலங்கானாவில், பாஜக வின் 17 வேட்பாளர்களில் கிட்டத்தட்ட 11 பேர் மாற்று கட்சி மாஜிக்கள். அரியானாவில் நிறுத்தப்பட்ட 10 வேட்பாளர்களில் 6 பேர் கடந்த 2014ம் ஆண்டுக்கு பின் பாஜகவில் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவரான நவீன் ஜிண்டால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பாஜவில் இணைந்தவர்.
பஞ்சாபில் நிறுத்தப்பட்ட 13 வேட்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் காங்கிரசில் இருந்து விலகிய பின் பாஜகவில் சேர்ந்தவர்கள் . ஜார்கண்ட்டில் நிறுத்தப்பட்ட 13 பேரில் ஏழு பேர் ஜேஎம்எம், காங்கிரஸ், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய கட்சிகளில் இருந்து பாஜகவில் சேர்ந்தவர்கள். உத்தர பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ள 74 வேட்பாளர்களில் 31 சதவீதம் பேர் அதாவது 23 பேர் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள்.
அதேபோல் ஒடிசாவில் 29%, தமிழ்நாட்டில் 26% வேட்பாளர்கள் பிறகட்சிகளில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்கள். மகாராஷ்டிராவில் நிறுத்தப்பட்ட 28 வேட்பாளர்களில் 8 பேர் வேறு கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்தவர்கள் ஆவர். மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கூட மாற்று கட்சியில் இருந்து வந்த 2 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாஜவில் இருந்து விலகி வேறு கட்சியில் சேர்ந்த பிறகு தாய் கட்சிக்கு திரும்பிய ஜெகதீஷ் ஷெட்டர்(கர்நாடகா), உதயன்ராஜே போன்சலே(மகாராஷ்டிரா), சாக்ஷி மகாராஜ்(உ.பி) உள்ளிட்ட 5 பேருக்கும் பாஜ தலைமையில் தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ளது.
இதெல்லாம் வெற்றியை தேடிக்கொடுக்குமா அல்லது தேர்தலுக்கு பின்னர் இந்த பறவைகள் மீண்டும் சொந்த கூட்டுக்கே திரும்புமா என பார்ப்போம்.