இராணுவ முகாமில் ஆயுதங்களை பறிக்க முயற்சி! இருதரப்பும் துப்பாக்கி சண்டை...ஒருவர் பலி!

த.நெல்சன்
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3-ம் தேதியிலிருந்து இரு பிரிவினருக்குமிடையே மோதல் ஏற்பட்டு வன் முறை வெடித்தது. இந்நிலையில் அங்கு இயல்பு நிலை திரும்புகின்ற மாதிரி தெரிந்தாலும் கூட சில பல சம்பவங்கள் அங்கு மக்களை பீதியடைய செய்திருக்கிறது.
அந்த வகையில், அம்மாநிலத்தில் தவுபல் மாவட்டத்தில் உள்ள காங்காபோக் என்ற இடத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் முகாம் உள்ளது. இந்த முகாமில் இருந்து ஆயுதங்களை கடத்த ஒரு கும்பல் முயற்சி செய்தது. அப்போது பாதுகாப்பு வீரர்களுக்கும், அந்த கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க வீரர்கள் கண்ணீர் புகைக்குண்டுகள், ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தினர். ஆனால், ஆயுதம் வைத்திருந்த அந்த கும்பல் வீரர்களை நோக்கி சுடத்தொடங்கினர்.
இதனால் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் கொள்ளையடிக்க வந்த கும்பலில் 27 வயது நபர் சுட்டு வீழ்த்தப்பட்டார். அதேவேளையில் அசாம் ரைபிள் வீரர் ஒருவரும் குண்டு காயத்திற்கு உள்ளானார். அந்த கும்பல் மற்ற பகுதிகளில் இருந்து வீரர்களை உள்ளே விரமுடியாத அளவிற்கு சாலைகளில் தடுப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
இருந்தாலும் வீரர்கள் அந்த இடத்திற்கு சென்று ஆயுத கடத்தல் முயற்சியை முறியடித்தனர். அந்த கும்பல் அசாம் ரைபிள் வீரர் மீது தாக்குதல் நடத்தியதுடன், வாகனத்தையும் தீ வைத்து எரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பெயர் ரொனால்டோ எனவும், மேலும் 10 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.