இந்தி திணிப்புக்கு எதிராக சுழன்றடிக்கும் போராட்டம்! மகாராஷ்டிராவில் பரபரப்பு!

நரேஷ்.என்,
மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் இந்தித் திணிப்பை முறியடிக்க திமுகவும், தமிழக மக்களும் பல தலைமுறைகளாக நடத்தி வரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மகாராஷ்டிராவிலும் போராட்டச் சூறாவளியாக சுழன்றுகொண்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 3வது மொழியாக இந்தியை கற்பித்தால் தான் நிதி ஒதுக்குவோம் என்று சட்டத்திற்கு புறம்பாக அராஜகமாக பாஜக நடந்துகொண்டுள்ளது. ஆனால், தான் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு பயந்து இரண்டாவது முறையாக பின் வாங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தித் திணிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று மும்பையில் நடந்த வெற்றிப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது என்று குறிப்பிட்டிருக்கும் ஸ்டாலின், உத்தர பிரதேசம், ராஜஸ்தானில் கற்பிக்கப்படும் 3வது மொழி என்ன, இந்தி பேசும் மாநிலங்கள் பின் தங்கியுள்ளன, இந்தி பேசாத மாநிலங்கள் முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியை திணிக்கிறீர்கள் என்றும் ராஜ்தாக்கரே எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி - சமஸ்கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சமக்ர சிக்ஷா அபியான் நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழ்நாட்டைப் பழிவாங்கும் போக்கை ஒன்றிய அரசு மாற்றிக் கொள்ளுமா என்றும் உடனே நிதியை விடுவிக்குமா எனவும் கேள்வி எழுப்பியதோடு, இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக மக்கள் நடத்தும் போராட்டம் அறிவுப்பூர்வமானது, தர்க்கப்பூர்வமானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும் என்றும், இல்லையெனில் பாஜகவுக்கும் அதன் புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும் என்றும் ஸ்டாலின் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன் செய்தி:- மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் வகையில் ஆளும் பாஜக அரசு இரண்டு அரசாணைகளை வெளியிட்டது. மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் 1 முதல் 5 வரை மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து, ஜூன் மாதம் மற்றொரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில், 1 முதல் 5 வகுப்பு வரை இந்தி மூன்றாவது பொது மொழியாக இருக்கும். அதே சமயம் 20க்கும் அதிகமான மாணவர்கள் இந்தி அல்லாமல் வேறு ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் என்று விரும்பினால் கற்பிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இரண்டாவதாக வெளியிட்ட அரசாணைக்கும் இது மறைமுக இந்தித் திணிப்பு என கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. மராத்தி மொழியை அழித்துவிட்டு இந்தி மொழியை திணிக்க முயல்வதாக சிவசேனா, நவநிர்மாண் சேனா உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
போராட்டங்களும் அறிவிக்கப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளாக அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரேவும், அவரது சகோதரர் ராஜ் தாக்கரவேவும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைகோர்த்தனர். இருவரும் இணைந்து மும்பையில் பிரமாண்ட பேரணி நடத்தப்போவதாக அறிவித்தனர்.
எதிர்ப்புகள் வலுத்த நிலையில் இந்தி மொழியை 3வது பாடமாக்கும் மும்மொழித் திட்ட அரசாணையையும் மகாராஷ்டிரா அரசு அண்மையில் வாபஸ் பெற்றது.
இதனையடுத்து, இந்தி எதிர்ப்புப் பேரணியை வெற்றிப் பேரணியாக நடத்தினர். இதில் உத்தவ் தாக்கரே , ராஜ்தாக்கரே இருவரும் இணைந்து ஒரே மேடையில் கைகள் கோர்த்தபடி போஸ் கொடுத்தனர்.
மேலும், மகாராஷ்டிராவில் இந்தியை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர். கடந்த காலங்களில் இந்தி திணிப்பு தொடர்பாக தமிழகத்தில் தான் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் தற்போது மகாராஷ்டிராவும் இணைந்துள்ளது.