தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் வரவேண்டும்:- பா.ஜ.க.ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

U.Sasi Kumar,
பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தமிழகம் வந்தார். அவர் நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு வந்து தங்கினார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.
பின்னர் கோவிலாம்பாக்கம் சென்ற அமித் ஷா, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:- தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்குவோம். தமிழகத்தில் இருந்து இரண்டு பிரதமர்களை தவற விட்டுள்ளோம்.
தமிழகத்தைச் சேர்ந்த காமராஜர், மூப்பனார் ஆகியோர் பிரதமர் ஆவதை தவறவிட்டுள்ளோம். இவ்வாறு இருமுறை பிரதமர்களை தவற விட தி.மு.க.தான் காரணம். வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிப்போம். அதற்கான பணிகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபடவேண்டும்.
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க உழைக்கவேண்டும். பாஜக நிர்வாகிகள், பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலமாக சென்னையிலிருந்து வேலூர் விமான நிலையத்திற்கு வந்தார்.