அரசியல் பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரண்!

ஜி.கே.சேகரன்,
அரசியல் பிரமுகர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேர் ஆம்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விவேகானந்தன்(38) இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர் இந்திய மக்கள் தேசிய கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விவேகானந்தன் தனது நண்பரான அஜித் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வாலாஜாபேட்டையில் இருந்து காவேரிப்பாக்கம் நோக்கி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமைதாங்கி அருகே வந்து கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த கார் இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் நிலை தடுமாறு கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய காரில் இருந்து கீழே இறங்கிய மர்ம நபர்கள் காயமடைந்து நிலையில் சாலையில் கிடந்த விவேகானந்தனை சரமாரியாக வெட்டி அருகே உள்ள ஏரிக்கரை மீது தூக்கிச் சென்று முகத்தை சிதைத்தும் வலது கையை துண்டித்தும் கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
உயிரிழந்த விவேகானந்தனுடன் இருசக்கர வாகனத்தில் வந்த அவரது நண்பரான அஜித் காயங்களுடன் தற்போது காவல்துறையினரின் விசாரணையில் உள்ளார்.
உயிரிழந்த விவேகானந்தனின் உடல் வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்ட நிலையில் விவேகானந்தன் கொலை செய்யப்பட்ட வழக்கு காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் விசாரணை தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் ராணிப்பேட்டை எசையனூர் பகுதியை சேர்ந்த கோபி, காவேரிப்பாக்கம் அத்திப்பட்டு காலனி பகுதியை சேர்ந்த ராஜேஷ், நெமிலி பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த தாமோதரன், நெமிலி பெரிய கிராமம் பகுதியைச் சேர்ந்த சந்துரு, நெமிலி மாமன்டூர் பகுதியை சேர்ந்த சூர்யா உள்ளிட்ட 5 பேர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன் சரணடைந்தனர்.
நீதிபதி அவர்களை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டார். பின்னர் 5 பேரையும் போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைத்தனர்.