ஒரு தாலுக்காவிற்கு 5 கார்மென்ட்ஸ் நிறுவ வேண்டும்! ஐ.ஏ.எஸ் அலுவலர் அறிவுறுத்தல்!

ஆர்.ரமேஷ்,
நகராட்சி பேரூராட்சி என கணக்கிட்டு ஒவ்வொறு தாலுக்காவிற்கும் 5 கார்மென்ட்ஸ்களை நிறுவ வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் முனைவர் சா.விஜயராஜ் குமார் இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் விடுதிகளிலும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மாணவர்கள் விடுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., முன்னிலையில் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின்போது மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உணவின் தரம் குறித்தும், மாணவர்களுக்கு காப்பாளர் மூலம் கற்பிக்கும் திறன் குறித்தும் நேரடியாக மாணவர்களிடம் கருத்துரை பெற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது பெரும்பாலான மாணவர்கள் ஆங்கில வழியில் கல்வி கற்பதாக தெரிவித்தனா.
அவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய சிறப்பு வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாணவர்களுக்கு வருடம் தோறும் வழங்கக்கூடிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு மேற்கொண்டு, அம்மாணவர்களிடம் கண்காணிப்பு அலுவலர் அவர்கள் கல்வி கற்பதினால் வாழ்வில் முன்னேறுவதற்கான வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
தொடர்ந்து திருப்பத்தூர் பிரதான சாலையில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு மாணவிகளுக்கு வழங்கக்கூடிய உணவுகளையும் பார்வையிட்டு, நாள்தோறும் இதேபோன்று சுவையாகவும், தரமாகவும் உணவு வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார். மாணவர்கள் வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து, விடுதியில் உள்ள 11 அறையிலும், தங்கி பயில்கின்ற மாணவர்களை ஒவ்வொரு அறையாக சென்று தூய்மையாக வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தினார்.
பாச்சல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் உள்ளிட்ட பள்ளிகளில் தீவிர ஆய்வு நடத்தி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் அனைத்து துறை உயர் அலுவலர்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் அரசுத் திட்டங்கள் குறித்தும், தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்தும், விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
இதில் குறைந்த சதவீத அடிப்படையில் செயல்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்து, மேலும், இதேபோன்று வரும் காலங்களில் தங்கள் பணியில் தொய்வு தன்மை இருப்பினில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர் முனைவர் சா.விஜயராஜ் குமார் இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:-
முதலமைச்சரின் சிறப்பான திட்டமான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களை குறித்த காலத்திற்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். இந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வுக்காணப்பட வேண்டும்.
ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தாட்கோ ஆகிய துறைகள் இணைந்து செயல்பட்டு தாலுக்காவிற்கு 5 தையல் கார்மெண்ட்ஸ்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் கார்மெண்டஸ் நிறுவப்பட வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்தப்படும் கோழி வளர்ப்பு திட்டம், மாவட்ட தொழில் மையம் மூலமாக தொழில் முனைவோர்களுக்கான கடன் உதவி, வருவாய் துறையின் வாயிலாக வழங்க கூடிய பட்டா, பட்டா பெயர் மாற்றம், சாதி சான்றிதழ் வழங்கும் பணிகள், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும்.
குடிநீர் வழங்கும் பணியை வாட்ஸ்அப் செயலி மூலம் ஒரு குழுவை உருவாக்கி தினசரி இப்பணிகளை கண்காணித்திட வேண்டும். மேலும் 15 நாட்களுக்கு ஒருமுறை நீர்த்தேக்க தொட்டிகளை தூய்மை செய்து குளோரின் கலந்த குடிநீரை தங்குதடையின்றி பொது மக்களுக்கு விநியோகம் செய்திட வேண்டும். மேலும் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டப்பணிகள், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பள்ளி கட்டுமானப் பணிகளை குறித்த காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நடைபெற்றுவரும் குடிநீர் இணைப்பு பணிகளை துரிதப்படுத்திட வேண்டும். நகராட்சி பகுதியில் நடைபெறும் கழிவு நீர் கால்வாய்கள் துரிதப்படுத்தி முடிக்கப்பட வேண்டும்.
தொடர்ச்சியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மக்களை தேடி மருத்துவம் திட்டப்பணிகள், பள்ளி குழந்தைகளை பரிசோதனை செய்யப்படும் பணிகள் குறித்தும் பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வில் தவறவிட்ட மாணவர்களை தேர்வு எழுத வைத்து அவர்களை தேர்ச்சியடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளிக்கல்வியை முடித்த மாணவர்கள் உயர்கல்வி படிப்பை தொடராமல் யாவரேனும் இருந்தால் அவர்களை கண்டறிந்து உயர்கல்வியை தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பள்ளிக்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகள் இணைந்து செயல்பட்டு தகுதிவாய்ந்த மாணவர்கள் அனைவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவியர்களுக்கு விரைந்து வழங்கிட வேண்டும்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் புதுமை பெண் திட்டம், வேளாண்மை - உழவர் நலத்துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்ட செயல்பாடுகள், விவசாயம் மேம்பாடு செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைகடைகளிலும் குடிமை பொருட்கள் அனைத்தையும் பொது மக்களுக்கு தங்கு தடையின்றி வழங்கப்பட வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் தங்களின் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, ஜோலார்பேட்டை சென் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்காக வழங்குவதற்கு ஏதுவாக விலையில்லா மிதிவண்டிகள் தயார்நிலை படுத்தும் பணிகளை நேரடியாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மிதிவண்டிகள் உதிரி பாகங்கள் பொருத்தும் பணியை விரைவுப்படுத்த அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது மாவட்ட வன அலுவலர் திரு.மகேந்திரன், இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர்.உமாமகேஸ்வரி மற்றும் அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.