தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிகளை அகற்ற 12 வாரம் கெடு!  ஐகோர்ட்டு உத்தரவு!

தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிகளை அகற்ற 12 வாரம் கெடு!  ஐகோர்ட்டு உத்தரவு!

அ.கார்த்தீஸ்வரன்,

 12 வாரத்தில் அரசியல் கட்சி மற்றும் இயக்கங்களின் அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்ற வேண்டும். அதே போல் புதிய கொடிக்கம்பங்கள் வைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது என ஐகோர்ட் கிளைலதிரடியாகஉத்தரவிட்டுள்ளது.

 இது பற்றின விவரம் வருமாறு,

 மதுரையைச் சேர்ந்த சித்தன், மாடக்குளம் கதிரவன் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தனித்தனியே மதுதாக்கல் செய்திருந்தனர்.

   அவர்கள் தாக்கல் செய்த மனுக்களில், ''அதிமுக கட்சி விழாவையொட்டி கூடல் புதூர் பகுதியில் ஏற்கனவே உள்ள அதிமுக கொடிக்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கொடிக்கம்பம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும். மேலும், மதுரை பைபாஸ் ரோடு பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் அதிமுக கட்சி கொடிக்கம்பம் அமைக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்'' என்று கோரியிருந்தனர்.

   இந்த மனு ஏற்கனவே பல கட்டங்களாக விசாரணைக்கு வந்தபோது, ''பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடிக்கம்பங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது? தமிழ்நாட்டில் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரத்தை அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்'' என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

 அரசு தரப்பில், ''தமிழ்நாட்டில் கொடிக்கம்பம் வைப்பது குறித்து ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக 114 வழக்குகள் பதிவாகியுள்ளன'' என தெரிவிக்கப்பட்டது.

   இதைத்தொடர்ந்து, ''இதில் போலீசாரின் பங்கு என்ன? கட்சி கொடிக்கம்பம் வைப்பது தொடர்பாக ஏதேனும் விதிகள் உள்ளனவா'' என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

   அரசு தரப்பில், ''தடையில்லா சான்று வழங்குவது மட்டுமே போலீசாரின் பங்கு. தற்காலிகமாக கட்சி கொடிக்கம்பம் வைக்க அனுமதி கோரும்போது சாலை எந்த வரம்பிற்குள் வருகிறதோ அந்த அதிகாரி தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் உள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டது.

   இதையடுத்து, ''நிரந்தரமாக கட்சி கொடிக்கம்பங்களை வைக்க எந்த விதிகளும் இல்லாத நிலையில், எவ்வாறு கட்சி கொடிக்கம்பங்கள் வைக்கப்படுகின்றன? அந்த இடத்திற்கு சம்பந்தப்பட்ட கட்சியினர் வாடகை செலுத்தலாமே? பொது இடங்களில் ஏராளமான கட்சி கொடிக்கம்பங்கள் உள்ளன. இதனால் ஏராளமான பிரச்னைகள் எழுகின்றன. பொதுவான இடத்தில் கட்சிக்கொடி கம்பத்தை வைக்க ஏன் அனுமதி கோருகிறீர்கள்? தங்களது வீடுகளில் வைத்துக் கொள்ளலாமே?.

 பொது இடம் பொதுமக்களுக்கானது. அங்கு தான் கொடி கம்பங்களை வைக்க வேண்டும் என்றால் சொந்தமாக நிலம் வாங்கி வைத்துக் கொள்ளலாமே? பஸ் நிலையங்கள் அருகே ஏராளமான கட்சிக் கொடி கம்பங்கள் உள்ளன'' என்று கூறி வழக்கை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

  இந்த மனுக்களை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இது தொடர்பாக உத்தரவை பிறப்பித்தார்.

 அதில், பொது இடங்களில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் மதம், சாதி சம்பந்தமான அமைப்புகள் கொடிக்கம்பங்களை வைப்பதால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி போக்குவரத்துக்கு இடையூறு, விபத்து ஏற்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் உருவாகின்றன.

  சில அரசியல் கட்சிகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக அளவிலான உயரங்களிலும் கட்சி கொடிக்கம்பங்களை அமைக்கின்றன. இது ஏற்கத்தக்கதல்ல. இதனை கருத்தில் கொண்டு கொடிக்கம்பங்கள் நடுவதில் நீதிமன்றம் கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறது.

  அதாவது, தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்கள் மற்றும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் அனைத்து கொடிக்கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். தவறினால் அரசே அகற்றி விட்டு அதற்குரிய செலவு தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும்.

  எதிர்காலங்களில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு வருவாய்த்துறையினர் அனுமதிக்கக் கூடாது. பட்டா இடங்களில் கொடி கம்பங்கள் அமைப்பது குறித்து அரசு உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

  பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் நேரங்களில் கட்சி கொடிகள் வைப்பதற்கு உரிய வழிகாட்டுதலை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் அனுமதி வழங்கலாம். அவ்வாறு அனுமதி வழங்கும்பட்சத்தில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது என்ற உறுதிமொழியையும், வைப்புத் தொகை மற்றும் வாடகை தொகையும் வசூல் செய்திருக்க வேண்டும்.

  இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவை அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உடனடியாக அனுப்பி அதை செயல்படுத்த வேண்டும்.

  நீதிமன்ற உத்தரவு முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் உறுதிப்படுத்த வேண்டும். கொடிகம்பங்களுக்கு அனுமதி கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என அதிரடியாக உத்தரவிட்டார்.

  இதையாவது அதிகாரிகள் நடைமுறைப்படுத்துவார்களா?