துப்பாக்கி குண்டுகளுக்கே அஞ்சாத பத்திரிகையாளர் அன்பழகன் விடைபெற்றார்! முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் இரங்கல்!

துப்பாக்கி குண்டுகளுக்கே அஞ்சாத பத்திரிகையாளர் அன்பழகன் விடைபெற்றார்! முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் இரங்கல்!

ம.பா.கெஜராஜ்,

 மூத்த பத்திரிகையாளர் திரு.வி.அன்பழகன் அவர்கள் உடல்நலம் குன்றி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று 13.10.2021 ஆம் தேதி இப்பூலகிலிருந்து விடைபெற்றார். அவரது மறைவுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார்.

 அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.வி.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக மறைவுற்றார் என்ற அதிர்ச்சி தரும் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நக்கீரன், தமிழ் முரசு உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றிய அன்பழகன் அவர்கள் மாற்றுக் குரல்களின் முக்கிய முகமாகத் திகழ்ந்தார் என்பதை அனைவரும் அறிவர்.

 மக்கள் செய்தி மையம் என்ற ஊடகத்தைத் தொடங்கிய அவர் அதிகார மையங்களின் தவறுகளை வெளிக்கொண்டுவந்து மக்கள் முன் நிறுத்துவதில் முனைப்புடன் செயலாற்றியவர் அடக்குமுறைகளை அஞ்சாமல் எதிர்கொண்டவர்.

உண்மையின் பக்கம் நின்று செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க துணிவுடன் செயல்பட்ட அவரது பணி ஊடக உலகில் நிலைத்து நின்று அவரது புகழைப் பேசும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஊடகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்த இரங்கள் குறித்த செய்திக்குறிப்பை தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

வி.அன்பழகன் பற்றின குறிப்புகள் சில

 தந்தை பெரியாரின் நம்பிக்கைக்கு உரியவரும், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்த சுயமரியாதை சுடரொளி புலவர் பூவாளுர் பொன்னாம்பலனாரின் குடும்பத்தை சேர்ந்தவர்.

 பூவாளூர் தியாகராச செட்டியார் மகா வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் தலைமை மாணாக்கன், கும்பகோணம் அரசாங்க கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் என்ற உயர்ந்த பதவியில் பணியாற்றிய போது உ.வே.சாமிநாத அய்யர் , வேலை கிடைக்காமல் வறுமையில் இருப்பதாக தெரிய வர , தன்னுடைய கும்பகோணம் அரசு கல்லூரியின் பேராசிரியர் பணியை துறந்து , அந்த பணியில் உ.வே.சாமிநாத அய்யரை அமர்த்தினார்.

 வாழ்நாள் முழுவதும் தமிழையே சிந்தித்து, அத்தமிழையே பிறருக்கும் பொருள் ஏதும் பெறாமல் கற்பித்தமையால் தமிழ் பேராசான் என்று அன்புடன் அழைக்கப்பட்ட பூவாளுர் தியாகராச செட்டியாரின் மகன் வயிற்று பேரன் தான் வி.அன்பழகன்.  

 உ.வே.சாமிநாத அய்யர் பிற்காலத்தில் சென்னையின் வீடு கட்டினார். அந்த வீட்டுக்கு தியாகராசச் செட்டியாரின் நன்றியை மறக்காமல் இருக்க , தியாகராசர் விலாசம் என்று பெயர் வைத்தார்.

 தாத்தா தியாகராச செட்டியார் நினைவாக, அவருடைய குருவின் ஞாபகமாக மீனாட்சிசுந்தரம் என்று தான் முதலில் பெயர் வைத்தார்கள். பின்னால் திராவிட இயக்கத்தில் பெற்றோர்கள் கொண்ட ஈர்ப்பின் காரணமாக அன்பழகன் என்று பெயர் மாற்றப்பட்டது.

வெளியான புத்தகங்கள்

 அன்பழகன் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 - ன் கீழ் பெற்ற தகவல்களை தமிழக மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 25-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார்

 இருளில் தமிழகம், சகாயம் (கிரானைட் ஊழல்) ,ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் சொத்துப்பட்டியல் , கனிம வள மாஃபியா பிடியில் தமிழகம் , குமரகுருபரன் ஐ.ஏ.எஸ் . லீலைகள் , மோசடி கட்சிகளுடன் மோடி , மும்மூர்த்திகளின் ஊழல் சாம்ராஜ்ஜியம் , தமிழக அரசின் ரூ .15,000 கோடி சிக்கிய ஐ.ஏ.எஸ் . அதிகாரிகள் ,

   தமிழக அரசின் ரூ .50,000 கோடி ஊழல், சின்னையா ப்ளஸ் கரிகாலன் கூட்டுக்கொள்ளை, அதிமுக அரசின் ஒரு இலட்சம் கோடி மெகா ஊழல் , பஞ்சமி நிலம் என்றால் என்ன? கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் முட்டை அரசாங்கம், இலவச மின்சாரத்தில் ரூ .15,000 கோடி ஊழல்.

   ஏமாற்றப்பட்ட விவசாயிகள், டெங்கு காய்ச்சல் பெயரில் மாதம் ரூ .100 கோடி போலி பில், ஐந்து ஆண்டுகளில் ரூ .6000 கோடி போலி பில் , ஊழல் நகராட்சிகள் பல்லவபுரம்,

  பம்மல் நகராட்சிகளின் ஊழல்கள் பாகம் -1 , அதிமுக நா அரசின் கொரோனா கொள்ளை பாகம் -1 , ஆவடி தொகுதி 100 கோடி ஊழல் உள்ளிட்ட 25 நூல்களுக்கு மேல் வெளியிட்டுள்ளார்.

செய்தி நிறுவனம்

  மக்கள் செய்தி மையம்.காம் தொடங்கப்பட்டு ஏழு ஆண்டுகளாக அதிகாரிகள் செய்யும் தவறுகள் , அரசின் நிர்வாகத்தில் நடக்கும் குளறுபடிகள், தமிழக அரசில் ஊழல்கள், அரசியல் கட்சிகள் செயல்பாடுகள் விமர்சனம் போன்ற செய்திகளை அவர் வெளியிட்டு வந்தார்.

 பிப்ரவரி 2019 முதல் மக்கள் செய்தி மய்யம் செய்திகள் (ஓபிசி)பிரைவேட் லிட் நிறுவனமாக பதிவு செய்து செம்மையாக நடத்திவந்தார்.

 தமிழக அரசின் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடக்கும் போது அதை சுட்டிக்காட்டுவதும், நல்லது நடக்கும் போது பாராட்டுவதும் பத்திரிகையாளரின் ஜனநாயக கடமை, அதில் அன்பழகன் பாரப்ட்சம் காட்டவில்லை.

 அந்த வகையில் அதிமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தியதால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அன்பழகன் மீது 23 பொய் வழக்குகள் போட்டு கைது செய்தது. குண்டர் சட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டு,119 நாட்கள் கோவை மத்திய சிறையில் தனிமைச் சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

18.12.2018 - ல் கோவையில் 24 - வது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 19.12.18 அன்று மாலை 6.10 மணியளவில் என் வீட்டுக்கு எதிரே உள்ள மண் சாலையில் அவர் சென்று கொண்டு இருந்த போது , கோவையை சேர்ந்த கூலிப்படையினர் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அந்த தாக்குதலில் அன்பழகன் மயிரிழையில் உயிர் தப்பினார்.

 இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது.

 தென்னிந்திய புத்தக விற்பனையாளர்  மற்றும் பதிப்பாளர் சங்கம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தக கண்காட்சி நடத்தியது. அந்த புத்தக கண்காட்சியில் ரூ 36,580 / செலுத்தி , ஸ்டால் எண் 101 ஐ பெற்ற அன்பழகன் அதில்  "மக்கள் செய்தி மய்யம் செய்திகள் (ஓபிசி)பிரைவேட் லிட்" நிறுவனத்தின் ஸ்டாலை நிறுவினார்.

  அதில் அதிமுக அரசின் ஊழல் புத்தகங்கள் உட்பட பலவற்றை விற்பனைக்கு வைத்தார்., அதை செய்யகூடாது என்று சங்க நிர்வாகிகள் மிரட்டினர். எழுத்து மூலம் கடிதம் கொடுத்தால் ஸ்டாலை காலி செய்வதாக அன்பழகன் தரப்பில் கோரப்பட்டது.  எழுத்து மூலம் கடிதம் கொடுத்த ஒரு மணி நேரத்தில் ஸ்டால் 101 - ஐ காலி செய்து , ஒப்படைத்தார்.

  ஆனால் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் முருகனை , ஸ்டால் 101 - க்கு அருகே இரும்பு கம்பியால் தாக்க முயற்சி செய்ததாக பொய் வழக்கு பதிவு செய்து , 11 நாட்கள் புழல் சிறையில் அடைத்தார்கள்.

   புழல் சிறையில் உணவு கிடைக்காமல் இரண்டு நாட்கள் பட்டினி போடப்பட்டார்.

   அன்பழகன் என்ற தனி மனிதனை பார்த்து அதிமுக அரசு ஆடியது, பத்திரிகையாளார் அன்பழகன் அப்படி ஆட்டுவைத்தார்.

   இருந்த போதும், அவரது குடும்பம் இதில் பாதிக்கப்படுவதால் பத்திரிகை துறையில் தொடர வேண்டுமா என்ற கேள்வியை அவருக்கு நன்கறிந்தவர்களுடன் பகிர்ந்துக் கொண்டார்.

 அதற்கான பதிலை அவர் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை, அவரது அதிரடி பாணி புத்தகங்கள் தொடர்ந்து வெளிவந்தபடி இருந்தது.

  மேற்படி பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களை சிறைகளில் அடைத்துவைத்திருந்த போது அவருக்கு மெல்ல கொள்ளும் சைனடு கொடுக்கப்பட்டதாகவும் கூறூவார். அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்., இது போன்ற அவருக்கெதிரான பிரச்சனைகளுக்காக பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தானாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணையும் நடத்தியது.

 ஊழல் அலுவலர்களுக்கும், கொள்ளையடித்த அரசியல்வாதிகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய பத்திரிகையாளர் வி.அன்பழகனின் மறைவு நமக்கெல்லாம் பேரிழப்பு என்றாலும் கூட, அவரது பிரிவால் அவரது குடும்பம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுருப்பது நிதர்சனமான உண்மை.

  வி.அன்பழகன் அவர்களின் ஒரே மகனுக்கு அரசு வேலை வாய்ப்பை வழங்குவதோடு, அவரது பத்திரிகை வாழ்வுக்காக அரசாங்கம் அளிக்கும் சலுகைகளை அவரது குடும்பத்துக்கு வழங்கி அவரது ஆத்மா சாந்தியடைய வைக்க வேண்டும்.