காவலர் குடியிருப்பில் அதிரடி உத்தரவிட்ட அமைச்சர் ஆர்.காந்தி!

கு.அசோக்,
காவலர் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வித அடிப்படை வசதிகளும் முழு அளவு உள்ளதா என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆய்வினை மேற்கொண்டார்.
இராணிப்பேட்டையில் உள்ள காவலர்கள் குடியிருப்பு பகுதிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யான்,இ.கா.ப. மற்றும் அரசு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்போது காவலர்களின் குடும்பத்தினரிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் நகராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் பொழுது அடைந்துள்ள மின்விளக்கு மாற்றுதல் குடிநீர் வசதிகள் எவ்வித தடையுமின்றி கிடைப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய அறிவுறுத்தினர்.
மேலும் வழக்குக்காக பறிமுதல் செய்யப்படுகின்ற வாகனங்களை குடியிருப்பு வளாகத்தினுள் நிறுத்துவதால் சிரமம் ஏற்படுவதாகவும், விளையாட்டு மைதானம் இல்லை என காவலர்கள் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதனைக் கேட்ட அமைச்சர் காந்தி காவலர் குடியிருப்பு பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தி விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.