அடங்க மறுக்கும் நடிகை!

அடங்க மறுக்கும் நடிகை!

  ஜி.எஸ்.மேத்யூராஜ்,

   கோலிவுட் நடிகையும் சர்ச்சைகளின் நாயகியுமான கங்கனா ரணாவத் தற்போது சீக்கியர்களை வெறுப்பேற்றியுள்ளார். இதன் காரணமாக அவர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

 பாரதப் பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

  அவரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் அதிருப்தி தெரிவித்தார்.

  அது தொடர்பாக சமூகவலைதளத்தில், சீக்கியர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.

   இதையடுத்து அவர் மீது மும்பை போலீசில் சீக்கியர்கள் அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

   அந்த புகாரில், கங்கனா ரணாவத் வேண்டும் என்றே, உள்நோக்கத்துடன் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடிய விவசாயிகளை காலிஸ்தானி அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், சீக்கியர்களை காலிஸ்தானி பயங்கரவாதிகள் எனவும் தெரிவித்ததாக கூறப்பட்டு இருந்தது.

  முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, சீக்கியர்களை அவரது காலணியில் போட்டு நசுக்கினார் எனவும் அவதூறு தெரிவித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

  அதே நேரத்தில் சீக்கிய அமைப்பினர் கங்கனா ரணாவத் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீலையும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

 அப்படியிருக்க சீக்கியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக மும்பை கார் போலீசார் நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். வேண்டும் என்றே மத உணர்வுகளை புண்படுத்தியது, மத நம்பிக்கையை அவமதித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.