முந்தும் திமுக...! நொண்டும் அ.தி.மு.க!
பா.ரமேஷ் ஆனந்தராஜ், தாம்பரம். முரளிதரன்
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் 9 மாவட்டங்களில் திமுக முந்திக் கொண்டிருக்க, அதிமுக நொண்டிக் கொண்டிருக்கின்றன.
திமுக அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங்களுக்கு மக்கள் கொடுக்கும் பரிசு இது என ஆளும் திமுக தரப்பில் சொல்லப்பட, மறுபக்கமோ..இது அராஜக வெற்றி, அதிகாரிகள் மூலம் அ.தி.மு.க.வின் வெற்றியை ஆளுங்கட்சி பறிக்கிறது? என எதிர்கட்சியினர் சவுண்டு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இது பற்றின விவரம் வருமாறு,
தமிழகத்தில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பிரிக்கப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி 9 மாவட்டங்களில், மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சில மாவட்டங்களில் இடைத்தேர்தலும் நடத்தப்பட்டன.
அதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திமுக முன்னணி.
அதில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இதில் சில இடங்களில் வெற்றி பெற்றவர்களை அறிவித்து வருகின்றன . இந்த நிலையில் , 9 மாவட்டஊராட்சி கவுன்சில்களையும் திமுக கூட்டணி கைப்பற்றும் சூழல் நிலவி வருகிறது.
6 மாவட்டங்களில் ஒரு மாவட்ட கவுன்சிலர் இடங்களை கூட அதிமுகவால் பிடிக்க முடியாத நிலையில் அக்கட்சி நொண்டிக்கொண்டிருக்கிறது.
ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக கூட்டணி 190 இடங்களில் முன்னிலை வகித்து வருவதாகவும், மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக கூட்டணி 120 இடங்களில் முன்னிலை இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஆட்சியின் சாதனைக்காக எங்களுக்கு இந்த வெற்றி கிடைத்தது என்கிறது திமுக.
அதே போல் அதிமுக 21 ஒன்றிய கவுன்சிலர்களாக முன்னிலையில் உள்ளனர். 7 பாமக , 5 மற்றவை , 3 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது. ஆளுங்கட்சியின் அராஜகத்தால் எங்களுக்கு இந்த பின்னடைவு என்கிறது அ.தி.மு.க.
இணையத்தில் ரிசல்ட் இல்லை
இந்நிலையில் ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு குறைவான வாக்குகள் என்பதால் இந்த பதவிகளுக்கான முன்னணி மற்றும் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் மதியத்திற்குள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது பொய்துப்போனது.
குறிப்பாக தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான ல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு முழு பலன் கிடைக்கவில்லை.,
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி 20 - ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கலாட்டா
வாக்குப் பதிவு தினத்தில் ஏற்பட்ட கலட்டாவை விட, தற்போது வாக்கு எண்ணிக்கை சமயத்தில் மையங்களில் அலுவலர்கள் கடும் சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள்.
இதில் ஆட்சியர் அளவிளான அலுவலர்களும் ஆளுங்கட்சியினரிடம் சிக்கி வசைவாங்கியது தான் வேதனை.
தாம்பரம் தொகுதிக்குட்பட்ட புனித தோமையர்மலை ஒன்றித்து உட்பட்ட 15 கிராம ஊராட்சிக்கு தேர்தல் நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது அங்கு பார்வையிட செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் இ.கா.ப. வந்தார். ஆளும் திமுகவினர் கலெக்டர் வந்த காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.