தமிழகத்தில் ஏப்ரல்19-ம் தேதி வாக்குப் பதிவு! நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல்!தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார்!

Naresh.N.
இந்தியாவின் 18 வது மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கும் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
தலைநகர் டெல்லியில் விஞ்யான் பவனில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மக்களவை தேர்தல் அட்டவணையை அறிவித்தார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் இருந்தனர்.
நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
ஏப்ரல் 19 நடைபெறும் முதல் கட்ட வாக்குப் பதிவில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி, பஞ்சாப், குஜராத் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்.
இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26 அன்றும், மூன்றாம் கட்டம் மே 7 அன்றும், நான்காம் கட்டம் மே 13, ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு மே 20 அன்றும், ஆறாம் கட்டம் மே 25 அன்றும், இறுதியாக ஏழாம் கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1 அன்றும் நடைபெறும்.
பின்னர் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடகா மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு இரண்டாம் கட்டத்திலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ஐந்தாம் கட்டத்திலும், நாட்டின் அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்திற்கு ஏழாம் கட்டத்திலும் வாக்குப் பதிவுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
7 கட்டங்களாக தேர்தல் - ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் பட்டியல்.
மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறுகிறது.
94 தொகுதிகளுக்கான 3 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெறுகிறது.
96 தொகுதிகளுக்கான 4 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது.
49 தொகுதிகளுக்கான 5 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 20-ம் தேதி நடைபெறுகிறது. 57 தொகுதிகளுக்கான 6 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 25-ம் தேதி நடைபெறுகிறது.
57 தொகுதிகளுக்கான இறுதி மற்றும் 7 ஆம் கட்டம் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஏற்கெனவே தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே ஒரே கட்ட தேர்தலுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் விவரம்
* வேட்புமனு தாக்கல் தொடக்கம்- மார்ச் 20
* வேட்புமனு தாக்கல் முடிவு- மார்ச் 27
* வேட்புமனு பரிசீலனை - மார்ச் 28
* வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30
* வாக்குப்பதிவு- ஏப்ரல் 19
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.
"2024 மக்களவைத் தேர்தலில் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும், அதில் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அதிகாரிகள், ஊழியர்கள், காவலர்கள் என 1.5 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்" எனக் கூறினார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த தேர்தலில் 97 கோடி மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள். இதில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 47.15 கோடி. மேலும் 1.82 கோடி வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். 21 முதல் 30 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 19.7 கோடி பேர். மேலும் 82 லட்சம் வாக்காளர்கள் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 40 சதவீத குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டிலிருந்தே வாக்களிக்க வசதிகள் செய்து தரப்படும்" என்றார் ராஜீவ்குமார்.
பொய் செய்தி மீது நடவடிக்கை
தேர்தல் நேரத்தில் பொய் செய்திகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடத்தப்படும்" உரிமம் பெற்ற துப்பாக்கிகளை சரண்டர் செய்ய வேண்டும். நாடு முழுவதும் 11 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பணம் பரிசுப் பொருட்கள் 835% பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
நட்சச்சித்திர பேச்சாளர்களுக்கு கட்டுபாடு,
நாடு முழுவதும் 2100 தேர்தல் பார்வையாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு கண்காணிக்கப்படும்.
நட்சத்திர பேச்சாளர்கள் நாகரிகமான முறையில் பேச்சை உறுதிப்படுத்த வேண்டும். தேர்தல் நேரத்தில் பொய் செய்திகளை பரப்புவோர் மீது உச்ச பட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
செய்தி போல் விளம்பரம் வெளியிடக்கூடாது.
ஜாதி மத ரீதியில் தேர்தல் பிரச்சார எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டாது. தலைவர்கள் வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களுக்கு அனுமதி இல்லை. செய்திகள் வெளியிடுவது போல் அரசியல் கட்சிகளை, வேட்பாளர்களை விளம்பரப்படுத்த அனுமதி இல்லை.
மக்களவை தேரதலுடன் 26 சட்டப்பேரவை உறுப்பினர் தேர்தலுக்கான இடைத்தேர்தல் நடைபெறும்.
குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, திரிபுரா உத்தரபிரதேஷ், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இவை நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்காடு சட்டப் பேரவை உறுப்பினருக்கான இடைத்தேர்தல் முதல் கட்ட நாடாளுமன்றத் தேர்தலின் போது நடைபெறும்
அதே போல் ஆந்திரா வில் மே 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்.
ஒடிசா சட்டமன்றத் தேர்தல் மே 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியிருக்கின்றன.
அதிக தொகுதிகள்,
தொகுதிகளின் அடிப்படையில், உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 80 தொகுதிகளும், மகாராஷ்டிராவில் 48, மேற்கு வங்கத்தில் 42, பிகாரில் 40 மற்றும் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும் உள்ளன.
இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், சிபிஎம், பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி (வடகிழக்கில் பி.ஏ.சங்மாவால் தொடங்கப்பட்டது, வடகிழக்கில் தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை பெற்ற முதல் கட்சி) ஆம் ஆத்மி என ஆறு தேசியக் கட்சிகள் தேர்தல் களத்தில் உள்ளனர்.