டீ காபி விலை விர்ர்ர்ர்ர்! ஆவின் பால் விலையேற்றத்தால் விளைவு!

சபரி.ஈஸ்வரன்,
ஆவின் பாலின் விலையை குறைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம் என்று மீனாட்சி சுந்தரேஸ் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட காபி டீ வர்த்தக சங்கத்தின் சார்பில் மதுரை வடக்கு மாசி வீதி பகுதியில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய சங்கத்தின் மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரேஸ், ' ஆவின் பால் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் ஏழை எளியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆவின் பால் நிறுவனம் அரசு சேவை நிறுவனம் இதனை தனியார் பால் நிறுவனங்களோடு ஒப்பீடு செய்து பால் விலையை உயர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. பால் விலை உயர்வு எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் காபி, டீ விலையை 3 ரூபாய் உயர்த்தி 15 க்கும் விற்பனை செய்வதென முடிவு செய்துள்ளோம்.
ஆவின் பாலின் விலையை குறைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் , மேலும் டீ கடைகளில் பேப்பர் கப்பில் டீ வழங்குவதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம் என்று மீனாட்சி சுந்தரேஸ் தெரிவித்தார்.
ஆவின் பால் விலையேற்றம் காரணமாக மாநிலம் முழுவதும் டீ காபி விலை ஏறுக்கிறது.