நீருக்கடியில் இருக்கும் கன்னியம்மன் பூஜைக்கு தடை! இரு பிரிவினர் மோதலால் நடவடிக்கை!

நீருக்கடியில் இருக்கும் கன்னியம்மன் பூஜைக்கு தடை! இரு பிரிவினர் மோதலால் நடவடிக்கை!

 கு.அசோக்,

 கிராமத்தில் இரு பிரிவினர் பிரச்சினையால் கோயில் திருவிழா நிறுத்தம் அசம்பாவிதம் தவிர்க்க போலீசார் குவிப்பு

  இராணிப்பேட்டை மாவட்டம் ,வாலாஜா அடுத்த பாகவெளி கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ பாப்பாத்தி கன்னியம்மன் கோயில்,இந்த கோயில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும்.

  இங்கு ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் வரும் முதல் ஞாயிறன்று கிணற்றையே கருவறையாக கொண்டு நீருக்கடியில் இருக்கும் கன்னியம்மனை பூஜைகள் செய்து வெளியே கொண்டு வந்து குறிப்பிட்ட ஒரு பிரிவினர் பொங்கல் வைத்து திருவிழா செய்வது வழக்கமாம்.

 இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதே கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்கு திருவிழா செய்வதற்கு இன்னொரு பிரிவினர் முயற்சி செய்துள்ளனர்.

 ஆனால் அதை அவர்கள் தடுத்து நிறுத்தியதாக தெரிய வருகிறது.

 இதனைத் தொடர்ந்து, வழக்கம் போல சித்திரை மாதம் முதல் ஞாயிறன்று திருவிழா செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

 இதற்கு இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து மாவட்ட நிர்வாகம் இரு தரப்பினரிடம் பேசி சமாதானம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.ஆனால் சமரசம் ஆகாததால் இரு பிரிவினருக்கும் இடையே அசம்பாவிதம் தவிர்க்க பாப்பாத்தி கன்னியம்மன் கோயில் திருவிழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

 இதனை அறியாமல் வழக்கம் போல  சென்னை, வேலூர்,ஆரணி, பெங்களூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து குடும்பம்,குடும்பமாக சுமார் 500 பேர் பொங்கல் வைத்து திருவிழாவை கொண்டாட பாகவெளி கிராமத்துக்கு வந்தனர்.

  ஆனால் அவர்களை போலீசார் ஊருக்குள் விடாமல் பேரிகார்டு அமைத்து ஊர் எல்லையில் தடுத்தனர்.

 இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் வெளி ஊரில் வந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சாலையில் இருபுறமும் கற்பூரம் ஏற்றியும் பொங்கல் வைத்தும் பாப்பாத்தி அம்மனை கண்ணீர் மல்க வழிபட்டு செய்து சென்றனர்.

  இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.