ஒரே நாளில் இரண்டு கொலை! பணியில் இருந்த போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தனர்? தாமாக முன் வந்து வழக்கு பதிந்த உயர்நீதிமன்றம்!

ம.பா.கெஜராஜ்,
நெல்லையில் காவல் துறையினர் கண் எதிரிலேயே ஒரே நாளில் இரண்டு கொலைகள் அரங்கேறின. இரண்டுமே திட்டமிட்ட கொலை என்பதால் பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பணியில் இருந்த போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தனர்? தாமாக முன் வந்து வழக்கு பதிந்த உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருச்செந்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்ற வாயிலில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். இந்நிலையில், நேற்று காலை நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்து 7 பேர் கொண்ட கும்பல், ஒருவரை விரட்டிக் கொண்டு வந்தது. அவர் நீதிமன்ற வாயில் வழியாக தப்பியோட முயன்றார்.
ஆனாலும் நீதிமன்றம் முன்பு அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய அந்த கும்பல், அங்கிருந்து காரில் தப்பிவிட்டது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர்கள், பொதுமக்கள் சிதறி ஓடினர். தொடர்ந்து, நீதிமன்ற வாயிலில் கூடிய வழக்கறிஞர்கள், காவல் துறைக்கு எதிராக கோஷமெழுப்பினர்.
மாநகர காவல் துணை ஆணையர் விஜயகுமார் மற்றும் போலீஸார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்டவர் கீழநத்தம் மேலூர் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி (38) என்பதும், கீழநத்தம் ஊராட்சி வார்டு உறுப்பினர் ராஜாமணி கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. கொலை முயற்சி வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. எனவே, ராஜாமணி கொலை சம்பவத்துக்கு பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து பாளையங்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆணையர் ரூபேஷ்குமார் மீனா கூறும்போது, "கொலை சம்பவம் தொடர்பாக கீழநத்தம் கீழூரைச் சேர்ந்த இருதயராஜ் என்ற ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் சுரேஷ், மனோஜ், சிவா, தங்கமகேஷ், மனோராஜ் ஆகியோர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற வாயிலில் பாதுகாப்பு குளறுபடி குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றார்.
அப்படியிருக்க உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்கிறது.
நெல்லை படுகொலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது நீதிபதிகள், "பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்துக்குள் ஒருவரை துரத்தி கொலை செய்துள்ளனர். அங்கு பணியில் இருந்த போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தனர்? கொலையாளிகளை காலில் சுட்டு அல்லது அவர்கள் தப்பிச் சென்ற காரின் சக்கரத்தையாவது சுட்டுப் பிடிக்க முற்பட்டிருக்கலாமே?" என்று கேள்வி எழுப்பினர்.
மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "நீதிமன்ற வளாகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீஸார் ஒருவரை அந்த இடத்திலேயே கைது செய்துள்ளனர்" என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், "நெல்லை படுகொலை தொடர்பாகவும், மாவட்ட நீதிமன்றங்களில் அளிக்கப்படும் போலீஸ் பாதுகாப்பு தொடர்பாகவும் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு மாலைக்கு தள்ளிவைத்துள்ளனர்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடும் கண்டனங்களை பதிவிட்டிருக்கிறார். எங்கும் கொலை, எதிலும் கொலை, நீதிமன்றத்தின் முன்பே படுகொலை நடந்துள்ளது திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துவிட்டதை உணர்த்துகிறது. நிர்வாகத் திறன் இல்லாத, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்காத முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார். நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. வேலூர் மாவட்ட பாஜக நிர்வாகி படுகொலை மற்றும் நெல்லையில் நீதிமன்றம் முன்பு நடந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.ªஇவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதே போல் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, கீழ நடுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (22). சென்னையிலுள்ள தனியார் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 2 நாளுக்கு முன் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று காலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவரை கமிட்டி நடுநிலைப்பள்ளி அருகே ஒருவர் வழிமறித்து கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை உறவினர்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இன்று உயிரிழந்தார். இதுதொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக மணிகண்டனை சேரன்மகாதேவியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் கொலை செய்தது தெரியவந்தது.
நெல்லைப் பகுதியில் ஒரே நாளில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது