நக்சலைட்டுகளால் குண்டு வீசப்பட்டு வீர மரணம் அடைந்த காவல் அதிகாரிகளுக்கு அஞ்சலி!

ஜி.கே.சேகரன்,
நக்சலைட்டுகளால் குண்டு வீசப்பட்டு வீர மரணம் அடைந்த காவல்துறை அதிகாரிகளின் 43ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் விழா 36 குண்டுகள் முழுங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் கடந்த 1979 - ம் ஆண்டு ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியை சேர்ந்த கேசவன் ரெட்டியார் மற்றும் அவரது மனைவியை கொன்று பணம் நகைகளை நக்சல்லைட்டுகள் கொள்ளையடித்தனர். அப்போதைய சட்டமன்ற உறுபினராக இருந்த அன்பழகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மீது நக்சலைட் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த நக்சலைட் அமைப்பை சேர்ந்த சிவலிங்கம் என்பவரை பிடிக்க அப்போதைய ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 1980-ம் ஆண்டு ஆகஸ்டு 6ஆம் தேதி ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்த தகவலின் பேரில் சிவலிங்கத்தை பிடித்தனர்.
பின்னர் போலிசார் ஜீப்பில் அவரை அழைத்து சென்ற போது திருப்பத்தூர் அருகே சேலம் பிரதான சாலையில் சிவலிங்கம் தான் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்ததில் ஜீப்பில் இருந்த ஆய்வாளர் பழனிசாமி தலைமை காவலர் ஆதிகேசவேலு காவலர்கள் யேசுதாஸ் மற்றும் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
இதனையடுத்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு ஆண்டு தோறும் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நக்சலைட்களால் வீரமரணம் அடைந்த நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு 43-ம் ஆண்டு வீரவணக்கம் நாள் அனுசரிப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னால் ஓய்வு பெற்ற காவல் இயக்குநர்¢ டபிள்யூ ஐ.வால்டர் தேவாரம், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப. திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி, மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர், மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து 12 துப்பாக்கி ஏந்திய போலிசார் வான் நோக்கி மூன்று முறை சுட்டு 36குண்டு முழங்க அஞ்சலி செலுத்தினர்.