அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இல்லை! பழனிச்சாமி தரப்பு கோர்ட்டில் தகவல்!

ம.பா.கெஜராஜ்,
அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கோர்டில் வாதிடப்பட்டது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ¢ ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அறிவோம். அதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இந்த வழக்கில் இன்னும் இறுதி தீர்ப்பு பிறப்பிக்கப்படவில்லை என்பதால் மீண்டும் தனி நீதிபதியை அணுகி பரிகாரம் தேட உத்தரவிட்டுள்ளனர்.
மேற்படி வழக்கை உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்து, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த கடந்தநவ.30-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்திருந்தார். இந்த தடையை நீக்க கோரி,உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அமர்வில் நடந்தபோது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எச்.அரவிந்த் பாண்டியன், அப்துல் சலீம் மற்றும்வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அதிமுகவின் பெயர், கொடி,சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் உள்ளிட்டோர் பயன்படுத்த கூடாது என தனி நீதிபதி இடைக்கால தடை விதித்திருப்பது ஒட்டுமொத்த வழக்கின் இறுதி தீர்ப்பு போல உள்ளது. ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கினாலும், அவரது பல லட்சம் ஆதரவாளர்கள் இன்னும் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக உள்ளனர்.
ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு அதிமுக என்பது ரத்தத்தில் ஊறிப்போன கட்சி. அதை யாராலும் பிரிக்க முடியாது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமா, செல்லாதா என்பதை, பிரதானவழக்கில் விசாரணை நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும். எனவே அந்த தடையை நீக்க வேண்டும்'' என வாதிட்டிருந்தனர்.
பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண், ''அதிமுக பொதுக்குழுவையும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி என்பதையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த கூடாது என தனி நீதிபதி விதித்த இடைக்கால தடையை நீக்குமாறு பதில்மனு தாக்கல் செய்யாமல், இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
ஓபிஎஸ் தரப்பில் பல லட்சம் ஆதரவாளர்கள் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இருக்கின்றனர் என்று கூறுவதும் உண்மை அல்ல. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என்பதால்தான் அவற்றை பயன்படுத்த தடை கோரினோம்'' என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில் அதிமுக பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை பயன்படுத்த தனி நீதிபதி கடந்த நவ.30-ம் தேதி வரை மட்டுமே இடைக்கால தடை விதித்துள்ளார். அந்த உத்தரவே இறுதி உத்தரவு கிடையாது. அந்த தடையை நீக்க கோரி பதில்மனு தாக்கல் செய்யாமல் மனுதாரர் இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவால் ஓபிஎஸ் தரப்புக்கு எந்த பாதிப்பும் கிடையாது. எனவே, பழனிசாமி தொடர்ந்துள்ள வழக்கை எதிர்கொள்ளும் வகையில், இந்த தடையை நீக்க கோரி மீண்டும் தனி நீதிபதி முன்பாகவே ஓபிஎஸ் பதில்மனு தாக்கல் செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என உத்தரவிட்டதுடன் ஓபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள்.