ஐடி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்!

டி.இ.முகமது,
பெங்களூருவில் உள்ள பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ்க்கு போன் கால் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த தகவல் கிடைத்ததும் ஊழியர்கள் மிகுந்த பதற்றத்திற்கு ஆளாகினர். உடனே அனைவரும் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரப்பன அக்ரஹார போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மோப்ப நாய்கள் உதவியுடன் கட்டிடம் முழுவதும் சோதனை செய்ததில் வெடிகுண்டு எதுவும் இல்லை. இது ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்தாலும், பொய்யான செய்தியை யார் அளித்தது என்ற கேள்வி எழுகிறது. அந்த போன் காலை ட்ரேஸ் செய்து விசாரணை நடத்தினர். அதில், டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த முன்னாள் பெண் ஊழியர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
பெங்களூருவில் கடந்த 6 மாதத்தில் இது இரண்டாவது சம்பவம் ஆகும். கொண்டாபூரில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்திற்கு கடந்த மே மாதம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உடனே ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் பொய்யான தகவல் என்று தெரிய வந்தது நினைவுகூறத் தக்கதாகும்.