சீர்கேடு, ஊழல்களுக்கு பொறுப்பேற்று துணை வேந்தர் பதவி விலக வேண்டும்! திருவள்ளுவர் பல்கலையில் போர்க்கொடி !

ஜி.கே.சேகரன்,
திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பல்வேறு தேர்வு குளறுபடிகளை கண்டித்தும் இணையவழி விடைத்தாள் திருத்தத்தை கைவிட கோரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.
வேலூர்மாவட்டம், சேர்க்காட்டில் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுபாட்டில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
அப்படியிருக்க இந்த பல்கலை மீது அவ்வப்பொழுது குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு. அந்த வகையில் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பல்வேறு தேர்வு குளறுபடிகளை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மூன்றாவது மண்டலத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
தலைவர் ஆசிப் அகமது தலைமையில் நடைபெற்ற இதனை பேராசிரியர் மனோகரன் துவங்கி வைத்தார். இதில் குமார் ஆரோக்கியராஜ், பிரின்ஸ் பிரபாகர் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
இப் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதாத மாணவர் தேர்ச்சி பெற்றதாகவும், தேர்வு எழுதிய மாணவர் தோல்வி எனவும் மதிப்பெண் வழங்காமல் நிறுத்தி வைத்தல் போன்ற குளறுப்டிகள் நடந்து மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல் பழைய வினாத்தாள்களை இந்த ஆண்டு தேர்வுக்கும் முறைகேடாக வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டியும், மேலும் இணைய வழியில் விடைத்தாளை திருத்த எதிர்ப்பு தெரிவித்தும் குரலெழுப்பினர்.
இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கபடும் எனவே அதனை கைவிட வேண்டும், தற்போதுள்ள மையங்களிலேயே விடைத்தாளை திருத்த வேண்டும், கல்வி குழு ஆட்சிமன்ற குழு தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும், மாணவர்களிடம் கட்டணம் என்ற பெயரில் பல்கலைக்கழகம் அதிக பணம் வசூலிப்பதை தடுக்கவும் தேர்வு குளறுபடிகள் நிர்வாக சீர்கேடு ஊழல் ஆகியவைகளுக்கு பொறுப்பேற்று துணை வேந்தர் பதவி விலக வேண்டும் கடந்த ஆறுமாதகாலமாக தேர்வு பணிக்கு வழங்க வேண்டிய மதிப்பூதியங்களை நிறுத்தி வைத்துள்ளதை உடனே வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடந்தது.
இதில் திரளானோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்
இதுகுறித்து பல்கலைக்கழக தரப்பில் தொடர்பு கொண்டு கேட்ட போது துணை வேந்தர் வெளிநாடுக்கு சென்றுள்ளதால் யாரும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது -