தமிழக அமைச்சர்களின் வழக்குகளை தாமாக விசாரித்த நீதியரசர் இடமாற்றம்!

ஜி.சாந்தகுமார்,
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து வேலூர் மாவட்ட நீதிமன்றம் அவரை அண்மையில் விடுதலை செய்தது. அந்த தீர்ப்பை தாமாக முன்வந்து விசாரித்தவர் தான் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ். அவரது இந்த செயலால் அதிர்ச்சியடைந்த பொன்முடியும், லஞ்ச ஒழிப்புத் துறையும் இதற்கு எதிராக மனு தாக்கல் செய்தனர். அதாவது, தாமாக முன்வந்து ஒரு வழக்கை எடுக்கும் நீதிபதியே, அந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என அந்த மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை கடந்த 9-ம் தேதி விசாரித்த நீதிபதி, பொன்முடி மீதான சொத்துக்குவிப்பை நானே விசாரிப்பேன் என அதிரடியாக உத்தரவிட்டார். இதேபோல, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான வழக்குகளையும் தாமாக முன்வந்து விசாரித்து வந்தார் நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ்.
ஆனால் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது குறித்து விசாரித்த போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்படுவது வழக்கம். அந்த வகையிலேயே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிபதி கங்காபூர்வாலா உள்ளிட்ட நீதிபதிகள் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.