தமிழக மக்களுக்கென தனி ஆதாரா?

தமிழக மக்களுக்கென தனி ஆதாரா?

  ம.பா.கெஜராஜ்,

 இந்திய குடிமக்களுக்கு  மத்திய அரசு சார்பில் ஏற்கனவே ஆதார் அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்க எண் கொண்ட 'மக்கள் ஐ.டி.' வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.

 ஆனால் அடையாள அட்டைக்கு பதில் அடையான எண் ஒதுக்கி அரசு அதை கண்காணிக்கும்.

  இதுகுறித்து தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

  தரவுகளின் அடிப்படையிலான அரசு (டேட்டா சென்ட் ரிக் கவர்ன்மெண்ட்) என்பது தி.மு.க. அரசின் முக்கியமான மக்கள் நல செயல் திட்டமாகும்.

  இத்திட்டத்தின் மூலம் ஒரு தரவு சார்ந்த உட்கட்டமைப்பை உருவாக்கி குடிமக்களுக்கு அரசின் திட்டங்கள் எளிய முறையிலும், வெளிப்படையான தன்மையுடனும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்ய முடியும். மாநிலத்தில் பல்வேறு துறைகள் மூலம் பல நல திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

 நலத்திட்டங்களின் தகுதியான பயனாளிகளை முறையாக அடையாளம் காணுவதற்கு 'மக்கள் ஐ.டி.' திட்டம் பெரிதும் உதவுவதோடு, தரவுகள் துறைகளுக்கு திட்டமிட மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

 தமிழக அரசின் ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனியே மென்பொருள் மற்றும் அதற்கான தரவுகள் உள்ளன.

 இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள தரவுகள் அனைத்தையும் ஒரே தரவு தளத்தில் ஒருங்கிணைத்து திட்டங்கள் தயாரித்தல் மற்றும் நடைமுறை படுத்துதல் நோக்குடன்தான் மாநில குடும்ப தரவு தள திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

  இதன் மூலம் குடிமக்கள் பெறும் அனைத்து நலத்திட்டங்களும் பல்வேறு துறைகளில் தரவுகளை ஒப்பிட்டு ஒருங்கிணைக்கப்படும்.

   இதன் மூலம் ஒவ்வொரு திட்டத்திற்கும் தகுதியான குடிமக்களை தரவு பகுப்பாய்வு மென்பொருள் மூலமாக எளிதில் அடையாளம் கண்டு நடைமுறைப்படுத்த முடியும்.

  மேலும் நலத்திட்டங்களுக்காக அரசை தேடி மக்கள் வரும் நிலையை மாற்றி நலத்திட்டங்களை அரசே முன்வந்து தகுதியான நபர்களுக்கு வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று சொன்னார்.