*கைலுக்கிய காவலர்.. கட்டி அணைத்த நடத்துனர்! ஒரு கப் டீயுடன் ஒருவழியா பஞ்சாயத்து முடிஞ்சது!
கே.ஏ.ஜெகதீஸ்வரி,
நெல்லை அருகே நாங்குநேரியில் சீருடையில் இருந்த காவலர் டிக்கெட் எடுக்க மறுத்த விவகாரத்தில் காவல்துறையினருக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்குமிடையே பனிப் போர் வெடித்த நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட காவலரும் நடத்துனரும் நேரில் சந்தித்து பேசி சமாதானமாகினர்.
கடந்த சில நாட்களுக்கு முன் நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் நாங்குநேரி என்ற இடத்தில் ஏறிய ஆறுமுகப்பாண்டி என்ற காவலரிடம் பயணச்சீட்டு எடுக்கும்படி நடத்துனர் கேட்ட போது, பயணச்சீட்டு எடுக்க காவலர் மறுத்துள்ளார்.
காவலர் பணியில் இருப்பவர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அவர் விளக்கமளித்துள்ளார். இந்த வாக்குவாதத்தை பயணி ஒருவர் காணொலியாக பதிவு செய்து வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து இதுகுறித்து விளக்களித்த அரசுப் போக்குவரத்துக் கழகம், ''அரசுப் பேருந்துகளில் காவலர்கள் இலவசமாக பயணிக்க முடியாது. அதற்கான அனுமதி வாரண்ட் இருந்தால் மட்டும் தான் பயணிக்க முடியும்'' என்று கூறியது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தலைநகர் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளுக்கு எதிராக போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.
ஒருவழிப் பாதையில் பயணித்தல், சீருடை அணிவதில் குறைபாடு, நிறுத்தத்தைத் தாண்டி நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி அரசுப் பேருந்துகளுக்கு தண்டங்களை விதித்து வருகின்றனர். கடந்த இரு நாட்களில் மட்டும் 250க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதனையடுத்து இருதரப்பும் சமாதானமாக வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
இதுதொடர்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், தலைமைச் செயலருக்கும்,போக்குவரத்து செயலருக்கு கடிதம் எழுதினர். இதனையடுத்து தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து செயலாளர் பணிந்தீரரெட்டி உடன் திடீர் ஆலோசனை நடத்தினர். இதன் காரணமாக போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் காவல்துறை இடையே பிரச்சினை நீடித்து வரும் இரு தரப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தகவல் வெளியானது.
இதற்கிடையே பிரச்சனைக்கு காரணமான காவலர் ஆறுமுகபாண்டியும், நடத்துனரும் சமாதனமாகியுள்ளனர். இருவரும் நேரில் சந்தித்து டீ குடித்து பேசியதோடு அதனை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளனர். அப்போது பேசிய நடத்துனர்,"பேருந்தில் பயணம் செய்த போது நான் வாரண்ட் கேட்டேன். அதற்குப் பிறகு நீங்கள் டிக்கெட் எடுத்து விட்டீர்கள்.. ஆனால் சோசியல் மீடியாவில் அதை தவறாக பரப்பி விட்டார்கள்.. இதனால் தான் பிரச்சனை" என்றார். அதனை தொடர்ந்து பேசிய காவலர் ஆறுமுக பாண்டி என் மீதும் தவறு உள்ளது. இருவருமே அரசு துறையில் பணியாற்றுகிறோம் இனிமேல் ஒன்றாக இருப்போம் என கைகுலுக்கினர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனையடுத்து இரு துறைகளுக்கு இடையே நீடித்து வந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் காவலர்கள் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் திருச்சியில் சுமார் 8 அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது