ஆட்சியரை நடந்து பணிக்கு வர சொன்ன சிறுமிகள்!

க.பாலகுரு
ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் நீங்கள் பணி செய்யும் இடம் இருந்தால் தயவு செய்து நடந்தே செல்லுங்கள் என ஆட்சியர் முதல் அரசு அலுவலர் பணி செல்லும் அனைவரையும் வலியுறுத்தும் சிறுமி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேல திருப்பாலக்குடி ஊரைச் சேர்ந்த மனோகரன் தம்பி தம்பதியரின் மகள் ஸ்ரீ லட்சுமி.
இவர் ஒரு தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரும் இவருடைய தோழி கலை என்பவரும் யாருக்கும் நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் சில வழிமுறைகளை உருவாக்கி அதனை ஆய்வு கட்டுரையாக எழுதி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக வழிமுறைகளை நோட்டீஸ் அடித்து மாவட்டம் முழுக்க உள்ள அரசு அலுவலகங்கள் பிற இதர அலுவலகங்களில் பணியாற்றும் அவர்களுக்கு கொடுக்க உள்ளார்கள்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் முதல் நோட்டீசை வழங்கினார்கள்.
மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அவர்களுடைய அறிவு நுட்பத்தையும் சிறுவயதில் இவ்வாறு யோசித்து செயல்படும் திறனையும் பாராட்டினார்கள்.
மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணரிடம் கொடுத்த பிறகு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் உள்ள அலுவலர்கள் பணியாளர்களிடம் நோட்டீசை வழங்கினார்கள்.
மேலும் காலையில் நடைபயிற்சி செல்லக்கூடிய நபர்களிடம் சென்று அவர்களிடம் நோட்டீசை வழங்கினார்கள்.
இவர்களின் முக்கிய விழிப்புணர்வு என்னவென்றால் ஒவ்வொருவரும் நீரிழிவு நோய் குணப்படுத்த நாள்தோறும் 5 லிருந்து 10 கிலோமீட்டர் வரை நடை பயிற்சி செய்கிறார்கள். ஆகவே அவர்கள் தங்கள் பணியாற்றும் பணியிடம் ஐந்து கிலோமீட்டர் இருப்பின் அவர்கள் நடந்தே பணிக்கு செல்லலாம்.
அவ்வாறு சென்றால் எரிபொருள் செலவு மிச்சமாகும் மேலும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்கிறார்கள்.
அதைப்போலவே தற்பொழுது சிறு குழந்தைகள் முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை என சிறு வயது முதலே பலருக்கு நீரிழிவு நோய் வந்து விடுகிறது.
இதற்கு முக்கிய காரணம் தற்போது உள்ள சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு வாகனங்களில் தான் அனுப்புகிறார்கள்.
மேலும் இருசக்கர வாகனங்களில் கொண்டு விடுகிறார்கள். இதைத் தவிர்த்து மூன்று இரண்டு கிலோமீட்டர் உள்ளாக உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் நடந்தோ அல்லது சைக்கிள் பயணம் மேற்கொண்டாலோ சிறுவயதில் நீரிழிவு நோய் வருவதை தடுக்கலாம்.
என இவர்கள் விழிப்புணர்வு செய்கிறார்கள். மேலும் நீரிழிவு நோய் தடுக்கஎன்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும், என்பது குறித்தும் , உடற்பயிற்சிகள் குறித்தும், உணவு கட்டுப்பாடு குறித்தும் இவர்கள் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்கள்.
அதுமட்டுமில்லாது நரிக்குறவர்கள் மற்றும் பொதுமக்களிடையே நீரிழிவு நோய் மேலாண்மை தொடர்பான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் பற்றிய ஆய்வையும் இவர்கள் மேற்கொண்டு
வருகிறார்கள்.