வெல்லம் தேடி வந்த யானை...கிடைக்காமல் போனதால் வேனை கவிழ்த்து ரகளை!

நூ.அ.பிலால்,
பல ஆண்டுகளாக ஜமுனாமரத்தூர் வனப்பகுயில் ஒற்றை தந்தம் உள்ள யானை சுற்றித் திருந்திக் கொண்டிருக்கிறது. அந்த யானை இதுவரை மனிதர்களுக்கு தீங்கு எதையும் ஏற்படுத்தியது கிடையாது.
ஆனால் நேற்று வெல்லம் கிடைக்காமல் போனதன் கோபத்தில் வேனை கவிழ்த்து களேபரம் செய்துவிட்டது.
இது பற்றின விவரம் வருமாறு,
திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமத்தூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 22 மாணவர்கள் விநாயக சதுர்த்தி விடுமுறைக்காக திருப்பத்தூர் மாவட்டம் காவலூர் அடுத்த புதூர் நாடு மலைப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு புறப்பட்டனர்.
அந்த மாணவர்களை ஆசிரியர்கள் மினி வேனில் ஏற்றி அனுப்பிவைத்தனர். சில ஆசிரியர்கள் பாதுகாப்புக்காக உடன் சென்றனர்.
அப்போது காவலூர் அருகே புதூர்நாடு செல்லும் வழியில் மாணவர்கள் பயணித்த வேன் சென்றுக் கொண்டிருந்த போது, மலை சாலையின் குறுக்கே காட்டு யானை நின்றுக்கொண்டிருந்தது.
உஷாரான வேன் டிரைவர் காளி சாதுரியமாக செயல்பட்டு வாகனத்திற்குள் இருந்த பள்ளி மாணவர்களை அவசர அவசரமாக கீழே இறக்கி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
தூரத்தில் நிறுத்தப்பட்ட வாகனத்தை நோக்கி வேகமாக வந்த அந்த யானை வேனை சுற்றி சுற்றி சோதனையிட்டது. துதிக்கையை வேனுக்குள் விட்டு துழாவியது. மூர்கத்தனகாக எதையோ தேடிய போது வேன் கவிழ்ந்துவிட்டது. இதனால் அந்த வேன் கவிழ்ந்து புதருக்குள் விழுந்தது.
மேலும் அதன் அருகில் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்களையும் தூக்கி வீசி விட்டு ஏமாற்றதுடன் திரும்பி அந்த காட்டு யானை ஜமுனாமத்தூர் அடுத்த வசந்தபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலங்காயம் வன அலுவலர் சேகர் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பள்ளி மாணவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு உணவு அளித்து மாற்று வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து வனத்துறை வட்டாரத்தினர் தெரிவிக்கையில், கடந்த இரண்டு நாட்களாக விவசாயிகள் சிலர் தாங்கள் உற்பத்தி செய்த வெல்லத்தை மினி லாரிகள் மூலம் இந்த பக்கம் எடுத்துச் சென்றுள்ளனர். அந்த வாசனையை வைத்துக் கொண்டு இந்த யானை வெல்லத்தை தேடி மாணவர்கள் வந்த வேனை மறித்து ரகளை செய்துவிட்டது.
மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட விலங்குகள் வந்தால் எப்படி தப்பிப்பது என்பது பற்றி நன்றாக அவர்களுக்கு தெரியும்.
ஆகையால் சாதுர்யமாக அவர்கள் தப்பினர். அவர்களுக்கு ஓட்டுநரும், உடனிருந்தவர்களும் நன்றாக உதவியிருக்கிறார்கள் மேலும் அனைவரும் நலமாக உள்ளனர் என்றார்கள்.